ஜெயலலிதா பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேச்சுக்கு டி.ஜெயக்குமார் கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அத்தனை பேருக்கும், மதநல்லிணக்கத்தோடு வாழக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி காட்டியவர் ஜெயலலிதா..
ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறி இருக்கும் கருத்து, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்து.
அண்ணாமலை திமுகவின் பி-டீமாக செயல்படுகிறார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பற்றி அண்ணாமலை வாய் திறப்பதில்லை. நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அம்மா வாங்கி கொடுத்தும், அதை செயல்படுத்த வக்கில்லாத திமுக வை கண்டிக்க அண்ணாமலைக்கு திராணி இல்லை. ஆனால், அம்மாவை ஒரு மதத்திற்குள் அடக்கும் இழிவான செயலை மட்டும் தொடர்ந்து செய்து வருகின்றார்.
ஒரு ஆளுநராக இருந்த தமிழிசை தவறான தகவலை கூறலாமா? கரசேவைக்கு அம்மா ஆட்களை அனுப்பினார் என்று கூறுகிறார், அதிமுக தலைவர்களே அதை பேசினார்கள் என்றும் கூறுகிறார். இப்படி பொறுப்பற்ற முறையில் அவர் பேசுவது, முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது.
கரசேவைக்கு ஆள் அனுப்ப அம்மா சொன்னார்கள் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் ராமர் கோவிலும் கட்ட வேண்டும், மசூதியும் இருக்க வேண்டும் என்றுதான் அம்மா விரும்பினார்கள்.
கொலை,கொள்ளை,கற்பழிப்பு,ஆள் கடத்தல் என்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
மேலும்,கஞ்சா போதை புழக்கம் அதிகமாக இருப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதையெல்லாம் பற்றி அண்ணாமலை என்றைக்காவது பேசியிருக்கிறாரா??
தெய்வபக்தி இருப்பதால் நீங்கள் எல்லோரும் மதவாதிகளா?? தெய்வபக்தி அம்மாவுக்கு இருந்தது ஆனால் மதவெறி கிடையாது.
மத்தியில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்கிறீர்கள். எனக்கு ஜோசியம் பார்க்க தெரியாது
தமிழ்நாட்டில் பாஜகவை ஒரு பெரிய கட்சியாக கருதவில்லை. சிறு வயது குழந்தையாக,சவலை குழந்தையாக தான் பார்க்கிறோம்.
பிஜேபி தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது!? திமுக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது!? அதிமுக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தது!? என்று ஒப்பீடு போட்டு உங்களுக்கு கொடுக்கிறேன் அதை பாருங்கள். இஸ்லாமிய மக்களுக்கு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான். இஸ்லாமிய மக்களுக்கு அமைதியை கொடுத்தது அதிமுக தான்.பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட பாதிப்பு ஏற்படாமல்,தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்தது.
ரேஷன் கடையில் பாமாயில் கிடையாது. சர்க்கரை,அரிசி போன்ற பொருட்கள் இல்லை. அடுத்த மாதம் வாங்க எனக் கூறுகிறார்கள். அடுத்த மாதம் வரை மக்கள் வயிற்றில் துணியை கட்டியிருப்பார்களா?.எது எப்படி என்றாலும் 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
