தூத்துக்குடிதொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு 13-ந் தேதி வரை வழங்கப்படும்; ஆட்சியர் லட்சுமிபதி
தூத்துக்குடி தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. 13-ந்தேதி வரை வழங்கப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சிடும் பணி 28.3.2024 அன்று தொடங்கப்பட்டு, 30.3.2024 அன்3று அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் பயன்படுத்தும் சீட்டு ஆனது 1.4.2024 அன்று முதல் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
அனைத்து வாக்காளர்களுக்கும் 13.4.2024 தேதிக்குள் வாக்காளர் தகவல் சீட்டு ஆனது வழங்கப்பட வேண்டும் என அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் தகவல் சீட்டின் முன்பகுதியில் வாக்காளரின் விபரங்கள், வாக்குச் சாவடி அமைவிடம், தேர்தல் நாள் மற்றும் நேரம் மற்றும் வாக்குச் சாவடி அமைவிட வரைபடம் ஆகிய விபரங்களும், வாக்காளர் பயன்படுத்தும் சீட்டின் பின்பகுதியில், வாக்காளர் முக்கியமாக செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத விபரங்களும் அச்சிடப்பட்டிருக்கும்.
மேலும், வாக்காளரின் விபரங்கள் மற்றும் வாக்குச் சாவடியினை கண்டறியும்பொருட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Booth App என்ற கைபேசி செயலிக்கான QR Code குறியீடு வாக்காளர் தகவல் சீட்டில் அச்சிடப்பட்டிருக்கும். மேற்கண்ட செயலியினை பயன்படுத்தி வாக்காளர் தங்களின் விபரங்கள் மற்றும் தங்களுக்குரிய சரியான வாக்குச் சாவடி ஆகியவற்றை விரைவாக கண்டறிந்து பயன்பெறலாம்.
மேலும், வாக்காளரின் புகைப்படம் வாக்காளர் தகவல் சீட்டில் அச்சிடப்படாத காரணத்தினால், ‘வாக்காளர் தகவல் சீட்டு ஆனது வாக்காளரின் அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணமாக வாக்குச் சாவடி மையத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, வாக்காளரின் அடையாளத்தை நிரூபிக்கும்பொருட்டு, வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தங்களின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்துச் செல்ல வேண்டும்” என்ற வாசகமும் வாக்காளர் தகவல் சீட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அனைத்து குடும்பங்களுக்கும் ‘வாக்காளர் கையேடு” வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்காளர் கையேட்டில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழிமுறைகள், வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேடும் வழிமுறைகள், வாக்குச் சாவடியின் அமைவிடம் பற்றி அறியும் வழிமுறைகள், வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டிய அடையாள ஆவணங்களின் விபரங்கள், வாக்குச் சாவடிக்குள் வாக்களிப்பதற்கான வழிமுறைகள், சட்ட விரோதமான செயல்களைப் பற்றி புகார் அளிக்கும் வழிமுறைகள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகள் குறித்த விபரங்கள் மற்றும் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி / தபால் வாக்கு வசதி ஆகிய விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆட்சியர் கோ..லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.