பிளஸ்-2 தேர்வு தொடங்கியது; கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 122 பேர் வரவில்லை
தமிழ்நாட்டில். பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் கடந்த 12 ம் தேதி தொடங்கி 17ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து பொது தேர்வு இன்று தொடங்கியது.
பொதுதேர்வில், 4.13 லட்சம் மாணவிகள், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.94 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். 3,302 மையங்களில் தேர்வு நடக்கிறது.
.இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறை கைதிகளும் தேர்வு எழுதுகிறார்கள். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 30 மையங்களில் தேர்வு நடக்கிறது. 3105 மாணவர்களும், 3910 மாணவிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.
ஒவ்வொரு தேர்வும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளி விட்டு நடக்கிறது. எழுத்துத் தேர்வுகள் இன்று மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி நிறைவடைகிறது.
முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 3105 மாணவர்களில் 70 பேர் வரவில்லை. 3910 மாணவிகளில் 52 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அடுத்ததாக நடக்கும் தேர்வுகள் விவரம் அறுமாறு:_
5.3.2024 ஆங்கிலம்
8.3.2024 கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல்
11.3.2024 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
15.3.2024 இயற்பியல், பொருளாதாரம்
19.3.2024 கணிதம், விலங்கியல், வணிகவியல்
22.3.2024 உயிரியல், தாவரவியல், வரலாறு
பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ம் தேதி வெளியாகும்.
ஸ்டாலின் வாழ்த்து
பொதுத்தேர்வு
எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இன்று எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை
அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.
பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்