மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பன்னீர்செல்வம், தினகரன்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை ராயபுரத்தில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் தலைத்தூக்கியது. தற்போதைய திமுக ஆட்சியில் இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலைதான் வியாபாரிகளுக்கும், வணிகர் சங்கங்களுக்கும்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளையும், மீனவர்களையும், ஊழியர்களையும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
காசு பணம் துட்டு மணி என்பதுதான் திமுக அரசுக்கும்,திமுக நிர்வாகிகளுக்கும் தாரக மந்திரமாக உள்ளது. பாஜகவின் பூச்சாண்டி வேலை அதிமுகவிடம் எந்த காலத்திலும் எடுபடாது. பாஜக, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் இவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெங்காயத்தைப் போல் உரிக்க உரிக்க தோலாக தான் இருப்பார்கள் உள்ளே ஒன்றும் இருக்காது.
அதிமுக ஆட்சி 31 ஆண்டு காலம் தமிழகத்தில் இருந்தபோது சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். சமூக நீதி இருப்பதாக கூறும் திமுக ஆட்சியில் தான் ஆணவ கொலைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன,
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு தமிழகம் தலைநகரம் போல் மாறிவிட்டது. போதை பொருள் புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.
அதிமுகவில் இருந்து கொண்டே திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு கழகத்துக்கு துரோகம் இழைத்தவர் தான் பன்னீர்செல்வம். தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்துவிட்டு, பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய போது ஓடிப்போய் ஒளிந்தவர்தான் பன்னீர்செல்வம். அவரும் டிடிவி தினகரனும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்.
தேர்தல் தேதி அறிவித்ததும் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். .
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.