கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் ; அதிகாலையில் சிறப்பு பூஜைகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் திருவாதிரை_திருவிழா ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.
காலை 3:30 மணிக்கு திருவணந்தல் பூஜை நடந்தது.
4 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜ மூர்த்தி மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜை, காலை 5:30 மணிக்கு
கோ பூஜை, மகா தீபாராதனை (தாண்டவ தீபாராதனை) நடந்தது.
காலை 8 மணிக்கு மேல்
சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜர் மற்றும் மாணிக்கவாசகர் அருள் பெற்றனர்.
திருவாதிரை சிறப்புகள்
சிவ பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று ஆருத்ரா தரிசன நாளாகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளையே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடுகிறோம்.
27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு ஆதிரை என்று பொருள். திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவ பெருமானுக்கு நடத்தப்படும் உற்சவத்தையே ஆருத்ரா தரிசனம் என்கிறோம்.
சிவ பெருமான் அபிஷேகப் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு தினமும் 16 முதல் 32 வகையான அபிஷேகங்கள் நடத்தப்படும். ஆனால் நடராஜருக்கு அப்படி கிடையாது. நடராஜருக்கு வருடத்திற்கு 6 குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி என ஆறுமுறை அபிஷேகம் நடத்தப்படும். இதில் மற்ற 5 அபிஷேகங்களும் மாலையில் நடத்தப்படும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று மட்டும் அதிகாலை 4 மணிக்கு முன்பாக, அதாவது சூரிய உதய காலத்திற்கு முன் நடத்தப்படும்.
ஆருத்ரா தரிசனம் என்பது பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். தண்டகாருண்ய வன மகரிஷிகள், சிவ பெருமானுக்கு எதிராக பலவிதமான பொருட்களை ஆயுதமாக ஏவி விட்டனர். ஆனால் அவற்றை எல்லாம் தனது அணிகலன்களாக ஏற்று, ஆனந்த நடனம் ஆடி, அவர்களின் ஆணவத்தை அடக்கியது இந்த ஆருத்ரா தரிசன நாளில் தான். சேந்தனார் என்னும் பக்தரின் வீட்டிற்கு சென்று களி சாப்பிட்டு, அவரின் பக்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டியதும் இதே நாளில் தான். வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவருக்கு சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டியதும் இதே நாளில் தான். அம்பிகை தனது பக்கைக்காக இறந்து போன கணவரின் உயிரை மீட்டு அவளுடன் சேர்த்து வைத்ததும் இதே நாளில் தான். அதனால் தான் இது பெண்களுக்குரிய விரத நாளான மாங்கல்ய நோம்பி என்றும் அழைக்கப்படுகிறது.