• June 6, 2025

பா,ஜனதாவுடன் கூட்டணி இல்லை; அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி

 பா,ஜனதாவுடன் கூட்டணி இல்லை; அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி

சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில்  அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளில் சமீபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.

இலங்கை தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். மக்களவை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய அரசு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். பாராளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைத்திட வேண்டும் என்பன  உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். மீண்டும் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்து கொள்கிறேன். அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ள்ளது.  பா.ஜனதா கூட்டணியில் இருந்து நாம் விலகியதால் முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு காய்ச்சலே வந்து விட்டது.

,மக்கள் பிரச்னையில், மத்திய அரசை குறை கூறி திமுக அரசு தப்பிக்க நினைக்கிறது.  தேசிய கட்சிகளை நம்பி இனி பிரயோஜனம் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மத்தியில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆண்டாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்க்கிறார்கள் .

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதும், கூட்டத்தினர் பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றனர். இருக்கைகளில் இருந்து எழுந்து விசில் அடித்து ஆட்டம் போட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *