சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் ஜனவரி 4 முதல் நாகர்கோவில் வரை நீட்டிப்பு

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மிக முக்கிய ரெயில் நிலையமாக விளங்கும் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வந்தே பாரத் ரெயில் சேவையானது நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பda உள்ளது. அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
