குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 352 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும், இன்று மனு அளித்த மாற்றுத்திறனாளி மீரான்கனி என்பவருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2,960/- மதிப்பிலான காதொலிக் கருவியினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.