தற்போது எந்த கட்சியுடனும் த.மா.கா.கூட்டணியில் இல்லை; ஜி கே வாசன் பேட்டி

திண்டுக்கல் தரகு மண்டி மஹாலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி கே வாசன் நிருபர்களை சந்தித்து பேசுகையில் கூறியதாவது:-எதிரிகளை வீழ்த்த முக்கியமான கட்சிகளுடன் கூட்டணி அமைய வேண்டும். ஆனால் இந்தியா கூட்டணி என்பது முரண்பாடான கட்சிகள் அமைத்த கூட்டணியாக உள்ளது.
பல மாநிலங்களில் அந்த கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் மிகப்பெரிய கட்சியாக உள்ளது,
பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் த.மா.கா. நட்புடன் இருந்து வருகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. முக்கிய சக்தியாக இருக்கும். தற்போது வரை த.மா.கா. எந்த கூட்டணியிலும் இல்லை.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. 4 மாதங்களில் எங்களது பிரசாரம் தொடங்கும்.
மக்களுடன் த.மா.கா. அதிக தொடர்பை ஏற்படுத்தி வருகிறது. நிர்வாகிகள் மக்களிடம் நேரடியாக சென்று பேச மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.பல மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக த.மா.கா விளங்கும். ஜனவரி மாதம் கூட்டணி முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
