கோவில்பட்டி வ.உ.சி. அரசு பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை சந்தித்து பேசினார். மாணவர்களை சந்தித்த போது கல்வியில் சிறந்து விளங்க அறிவுரை வழங்கினார்.
மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகங்களையும் பார்வையிட்டார். மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய விலையில்லா பொருட்கள் சேமிப்பு கிடங்குக்கு சென்று பார்வையிட்டதுடன் அதனுள்ளே இருந்த பொருட்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
தேனியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பெரியகுளம், சாத்துார், கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களை பார்வையிட்டேன்.
105 ஆண்டுகள் பழமை வாய்ந்த வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் உள்ளே நுழைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது.
100 ஆண்டுகள் தாண்டிய பள்ளிகளை அதன் பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு முதல்வர் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பள்ளியும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
