சிறுபான்மை மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே உள்ளது; முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.பூத்கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
தி.மு.க. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் சிறுபான்மையினர் வஞ்சிக்கப்படுகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கும் இதே நிலைதான்.
சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில்தான் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சிறுபான்மையின மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இல்லை. அதனால், சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிமுகவுக்கே உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ரீதியாக போராடிக்கொண்டிருந்த போதே அரசு சாரபில் நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்தினோம். ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து தற்போது யூடியூபராக மாறிவிட்டார். லைக் பண்ணுங்க, கமண்ட் பண்ணுங்க , ஷேர் பண்ணுங்க பெல் ஐகான் கிளிக் பண்ணுங்க என்று பேசி வருகிறார்.
அமைச்சர் உதயநிதியும், முதலமைச்சர் ஸ்டாலினும் சேர்ந்து மக்களை திசை திருப்பி ஏமாற்றி வருகின்றனர் தமிழகத்தில் மருத்துவத்துறை தற்போது தூங்கி கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்து கையிருப்பு இல்லை.
1999 முதல் 2004 வரை தி.மு.க., பா.ஜ.க.வின் கொத்தடிமையாக இருந்து வந்தது. நேரத்திற்கு ஏற்றார் போல அவர்கள் மாறிக்கொள்வார்கள்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
மத்திய மந்திரி அமித்ஷா பிறந்தநாளுக்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தலைவர்கள் வாழ்த்து கூறாமல் இருந்ததும், ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து கூறியதற்கு அது கூட்டணியின் வெளிப்பாடாக இருக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு டி.ஜெயகுமார் பதில் அளிக்கையில். “கூட்டணியின் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது தான் ஒவ்வொரு கட்சியின் தலைமை முடிவு எடுக்கும் என்பதே எனது கருத்து” என்று குறிப்பிட்டார்.
