தூத்துக்குடியில் `ஹேப்பி ஸ்ட்ரீட்’ நடத்த அனுமதிக்க கூடாது; இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவிசண்முகம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு அலுவலகம் சென்று அளித்த கோாரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற `ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அதிகளவு மக்கள் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இளைஞர்களுக்குள் அடிதடி போன்ற விபரீத முடிவுகள் ஏற்பட்டது.
.திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் சமுதாய ரீதியான பிரச்சினை உள்ள மாவட்டங்கள். இந்த நிலையில் தூத்துக்குடியில் `ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்று பல விளம்பர நிறுவனங்கள் மற்றும் யு.டியூப் தளத்தில் விளம்பரம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு போதுமான சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் பொது போக்குவரத்தை நிறுத்திவிட்டு இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனுமதி கொடுத்தால் கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும்.
இந்த வகையான நிகழ்வுகளால் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாக கூடும். மேலும் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடக்கும் முன்னர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறி உள்ளனர்.