தேர்தல் நெருங்கும்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும்; டி. ஜெயக்குமார் பேட்டி
சென்னை ராயபுரத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடந்த கூழ் வார்த்தல் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :-
திமுக ஆட்சியில் கஞ்சா , கள்ளச்சாராயம் சாதாரணமாகிவிட்டது. காவல்துறை நடவடிக்கை எடுத்தால் , அவர்கள் அடி உதை வாங்கும் நிலை உள்ளது. சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறும் ஸ்டாலின் எதையும் ஒழிக்கவில்லலை. தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிட்டது.
அண்ணா நகர் டவர் பூங்காவில் நேற்று நடந்த ஓவியக் கண்காட்சியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் திமுகவினர் தரக்குறைவாக நடந்து கொண்டு , மாமூல் கேட்டுள்ளனர். அதிகாரியிடம் மாமூல் கேட்ட ஒரே கட்சி திமுகதான்.
நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்போம். அவர்களுக்கு எதிரான எதையும் ஏற்க மாட்டோம்.
பல கட்சி தாவி அதிமுகவிற்கு வந்த மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கிறார். மதுரை எழுச்சி மாநாடு அவர்களின் கண்ணை உறுத்துகிறது , எனவே கொடநாடு குறித்து பேசுகின்றனர். அது குறித்து ஏற்கனவே எடப்பாடி தெளிவாக கூறிவிட்டார் , அந்த குற்றவாளிகளை பிணையில் எடுத்தது திமுகதான். திமுகவினர் இன்னும் ஏன் சிபிஐக்கு செல்லாமல் இருக்கின்றனர்? அரசியல் காழ்ப்புணர்வால் அதை கையில் எடுத்துள்ளனர்.
எடப்பாடி தலைமையில் கட்சி இருப்பதால் அதை ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கின்றனர்.
மருது அழகுராஜ் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் . நேற்று வந்த உதயநிதியால் அதிமுகவை ஒழித்துவிட முடியுமா..? எத்தனை கருணாநிதி , ஸ்டாலின் வந்தாலும் உலகம் உள்ளவரை அதிமுகவை அழிக்க முடியாது.
2021 ல் வெறும் 3 சதவீதத்தில் ஆட்சி அமைத்தனர், இல்லையேல் நிரந்தர வனவாசம் சென்றிருக்கும் திமுக. 2026 க்கு பிறகு திமுக இருக்குமா என பார்க்க வேண்டும்.
எங்களை குப்பை என்கின்றனர் , குப்பை உரமாகும் , ஆனால் திமுக எனும் கரையான் , எல்லாவற்றையும் அரித்து நாசமாக்கிவிடும். கரையான்கள் களையெடுக்கப்படும் காலம் வந்துவிட்டது.
கருணாநிதி முதலமைச்சர் பதவி எனும் அரியணையை ஏற காரணம் எம்ஜிஆர். உதயநிதி , லியோனிக்கு பக்குவமும் , முதிர்ச்சியும் இல்லாத அரசியல்வாதிகள்.
அரசியலில் மாற்றங்கள் இயல்பு , கூட்டணியில் மாற்றம் வரும். திருமாவளவனுக்கு விருப்பம் இல்லாமல் திமுகவில் இருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகளும் வெளி வரும்.
வேங்கைவயலில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வில்லை , நெல்லையில் தாக்கப்பட பட்டியல் சமூக இளைஞரின் வீட்டுக்கு முதலமைச்சர் ஏன் சென்று பார்க்கவில்லை. காசு , பணம் மட்டும்தான் அவர்களது குறிக்கோள்.
ஊழல் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை… சிஏஜி மூலம் பாஜக ஊழல் செய்வதாக திமுக குற்றம் சாட்டுவது தவறு.
மாணவர்கள் , தமிழக மக்கள் நீட்டை விரும்பவில்லை என கடந்ந 2 ஆண்டாக நீட் குறித்த எங்களது நிலைப்பாட்டை கூறி வருகிறோம் , எனவே மதுரை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி எங்களது நிலைப்பாட்டை கூறி வேண்டிய அவசியம் ஏற்படவில்லை .
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.