“எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவர்கள் மட்டுமே அ.தி.மு.க. என்று சொல்ல முடியும்”- கடம்பூர் ராஜு
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், வெற்றி ஊர்வலம் நடத்தியும் கொண்டாடி வருகிறார்கள். கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
ஐகோர்ட்டு தீர்ப்பையொட்டி கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற முடிவின் படி கடந்த ஆண்டு ஜூலையில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார்கள். பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்தது. மறுபடியும் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4பேர் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கபட்டது செல்லும். பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து விட்டது.
இந்த உத்தரவின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்பவர்கள் மட்டுமே தங்களை அ.தி.மு.க.வினர் என்று கூறிக்கொள்ள முடியும். அ.தி.மு.க. பெயர் மற்றும் கட்சி கொடியை ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தமுடியாது. நமது மாவட்டத்தில் தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு கடம்பூர் ராஜு கூறினார்.