நடைபயிற்சி: காங்கிரஸ் தலைவர் அழகிரி மயங்கி விழுந்து காயம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த ஊர், கடலுார் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் திருப்பணிநத்தம் கிராமம் ஆகும். சென்னை நந்தனம் அரசு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பிலும் அவருக்கு வீடு உள்ளது. சென்னையில் இருக்கும் போது அங்கு அவர் தங்குவார்.
கடந்த சில நாட்களாக சொந்த ஊரில் கே.எஸ்.அழகிரி, குடும்பத்துடன் தங்கி இருந்தார். சிதம்பரத்தில் அழகிரி குடும்பத்தினர் நடத்தி வரும் கல்லுாரியின் மைதானத்தில், நேற்று காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது மூக்கு கண்ணாடி உடைந்து, அதில் உள்ள கண்ணாடி துகள், முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டது. மேலும் . முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.
அழகிரி கீழே விழுந்ததை கண்ட ஒரு பெண் உடனடியாக கே.எஸ்.அழகிரிக்கு முதல் உதவி செய்துள்ளார். இருப்பினும் ரத்தம் நிற்காமல் அதிகமாக வெளியேறியதால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காலுக்கு, ‘சிடி’ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
மூட்டு ஜவ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஓரிரு நாட்கள் நடக்காமல் ஓய்வு எடுக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர். சிகிச்சை முடித்த பின், அவர் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.