தூத்துக்குடியில் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன `மயில் கோலா’ மீன்
தூத்துக்குடியை அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாத தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அசோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அவர்கள் வீசிய வலையில் அரிய வகை `மயில் கோலா’ மீன் சிக்கியது.
இந்த மீனுக்கு மயில் போன்று பெரிய தோகை இருப்பதால் இன்று மீன் மயில் மீன் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 7 அடி நீளம் இருந்த அந்த மீன் 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இந்த மீனை மீனவர்கள் ஏலம் விடும் இடத்துக்கு கொண்டு வந்தனர், அந்த மீனை ஏலம் எடுக்க வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தமிழகத்தில் இந்த மீன்களை உணவுக்கு பயன்படுத்துவது கிடையாது. ஆனால் கருவாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேரளாவில் இந்த மீனை உணவிற்கு பயன்படுத்துகிறார்கள். இறுதியில் இந்த மீன் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.