பொது கலந்தாய்வு மூலம் 115 போலீசார் இடமாறுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த இந்த கலந்தாய்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 115 போலீசார் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், கோடிலிங்கம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சத்தியராஜ், சுரேஷ், மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் உள்ளிட்ட குழுவினர் முன்பு கலந்தாய்வு நடைபெற்றது, நடைபெற்றது.
இந்த குழுவின் மூலம் காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கெனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்தார்..
இது வழக்கமான நடைமுறை என்ற போதிலும் விருப்பத்தின் அடிப்படையில் பொதுமாறுதல் மூலம் பணியிட மாறுதல் கிடைத்ததால் காவல் துறையினர் மகிழ்ச்சியுடன் ஆணையை பெற்றுச் சென்றனர்.