கோயில் கும்பாபிஷேக விழாவில் கடம்பூர் ராஜூ பங்கேற்பு

கோவில்பட்டி அருகே தெற்கு செமப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள இல்லங்குடி அய்யனார் ,பலவேசக்கார் திருக்கோயில் மற்றும் கோவில்பட்டி அருகே கொடுக்காம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள தேவி காளியம்மன் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் சாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மஹா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
