• May 20, 2024

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி: டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது

 கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி: டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற 16 அணிகள் கலந்து கொண்டன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளும், காலியிறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது.

இறுதி போட்டிக்கு டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் தகுதி பெற்றன. நேற்று மாலை இறுதி போட்டியை கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் இந்திய தேசிய பீல்ட் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் அர்ஜுனா விருது பெற்றவருமான முகமது ரியாஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின. போட்டி தொடங்கிய 15வது நிமிடத்தில் டெல்லி அணி தனது முதல் கோலை அடித்தது. 18வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி பதில் கோல் அடித்தது. இதையடுத்து டெல்லி அணி வீரர்கள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் ஆடி ஆட்டத்தின் 29, 48வது நிமிடத்தில் கோல்கள் அடித்தனர்.
இறுதியில் 3 – 1 என்ற கோல் கணக்கில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

முன்னதாக 3, 4 இடங்களுக்கான போட்டியில் டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் ஷீட் அவுட் முறையில் 5 – 4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணிக்கு லட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஆக்கி கோப்பை மற்றும் ரூ.1லட்சத்துக்கனா ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாமிடம் பெற்ற செகந்திரபாத், சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணிக்கு ரூ.75,000- ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற டெல்லி, பஞ்சாப் நேஷனல் பேங்க் அணிக்கு ரூ.50,000-க்கான ரொக்கப் பரிசு, நான்காமிடம் பெற்ற டெல்லி, காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணிக்கு ரூ.30,000-க்கான ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கபட்டது.
மேலும் காலிறுதிப் போட்டியில் விளையாடிய கோவில்பட்டி – ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணி, சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அணி, பெங்களூரு – கனரா பேங்க் அணி, சென்னை – ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி ஆகிய அணிகளுக்கு ஆறுதல் ரொக்கப் பரிசாக தலா ரூ.20,000 வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு, கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி.சங்கரநாராயணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்னம்மாள், ஷண்மதி, சி.ராமசாமி, நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்.மதிவண்ணன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வழக்கறிஞர் சம்பத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் கே.பி.ராஜகோபால், காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருப்பதி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் எஸ்.சண்முகவேல் வரவேற்றார். நிறைவாக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர், தாளாளர், இயக்குனர் மற்றும் முதல்வர்கள் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் கே.ரகு, முனைவர் ஆர்.ராம்குமார் மற்றும் முனைவர் ஆர்.சிவராஜ், ஆக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *