சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 3 மாதங்களில் கீழமை கோர்ட்டு விசாரணையை முடிக்க ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
தூத்துககுடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டுக்கள் முருகன், சாமத்துரை, போலீஸ்கார்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ., கொலை வழக்குப் பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவில் “முக்கிய சாட்சிகளான போலீஸ்காரர்கள் ரேவதி, பியூலா உட்பட 47 சாட்சிகளிடம் மட்டுமே கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. பிற சாட்சிகளை விசாரிக்க பல ஆண்டுகளாகும். நீண்டகால விசாரணையின்போது சிறையில் உள்ள கைதிகளை ஜாமினில் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். ஜாமீன் அனுமதிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அப்போது சி.பி.ஐ.,தரப்பில் “132 சாட்சிகளில் 47 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது. மற்ற 85 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. மனுதாரர் உட்பட 9 பேரும் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் நடந்து கொள்கின்றனர். இவர்கள் ஏற்கனவே சாட்சிகளை பல வழிகளில் மிரட்டியுள்ளனர். ஜாமீன் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என ஆட்சேபம் தெரிவித்தது.
இதையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்வதாகவும், கீழமை நீதிமன்றம் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.