பொதுமக்களிடம் மனு எழுத பணம் கேட்க கூடாது, மாவட்ட நிர்வாகம் மூலம் பணம் தர ஏற்பாடு- ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு முதியவர் தனது மனைவியோடு மனு அளிக்க வந்திருந்தார். ஆட்சியர், அவர்களிடம் விசாரித்தபோது, தனது பெயர் சிவானந்தப் பெருமாள் என்றும், 80 வயதான தான் 60 வயதுள்ள தனது மனைவியுடன் ரூ.150 செலவு செய்து ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர், முதியவர் அளித்த மனுவைப் பார்த்தபோது கோரிக்கை எழுதப்பட்டு கீழே கைரேகை வைக்கப்பட்டிருந்தது. அப்போது யார் மனு எழுதியது என்று கேட்டதற்கு ஆட்சியர் அலுவலகம் வரும் வழியில் சாலையோரம் உள்ள மனு எழுதும் நபர்கள் எழுதி தந்ததாகவும், மனு எழுதுவதற்கு ரூ.50 கொடுத்ததாகவும் தெரிவித்தார். எனவே ஆட்சியர் செந்தில்ராஜ், சாலையோரம் மனு எழுதும் நபர்களிடம் சென்று கேட்டபோது, “ஒரு மனு எழுதுவதற்கு ரூ.50 பொதுமக்களிடம் வாங்குவதாகவும், அதுதான் தங்களது வாழ்வாதாரம்” என்று தெரிவித்தனர்.
அவர்களிடம் இனி பொதுமக்களிடம் மனு எழுதுவதற்கு பணம் வாங்க வேண்டாம் , மாவட்ட நிர்வாகம் மூலம் மனு எழுதுவதற்கு பணம் தருவதாக ஆட்சியர் தெரிவித்தார். அப்போது தினமும் ரூ.500 முதல் ரூ.600 வரை வருமானம் கிடைப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம், பொதுமக்களிடம் இனி மனு எழுதுவதற்கு பணம் வாங்கக்கூடாது, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து மனு எழுதுவதற்கு பணம் தருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் ஆட்சியர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இனி இலவசமாக மனு எழுதி கொடுப்பார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் குன்றியவர்கள், நோயாளிகள் வழிபாட்டுத் தலங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பொது இடங்களில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இதுபோன்ற ஆதரவற்றவர்களை மீட்டு உடனடியாக மனநல காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி ஆக்டிவ் மைன்ட், நாசரேத் நல்ல சாமரியன் போன்ற காப்பகங்களில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அவர்களை பாதுகாப்பதற்கு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.