• June 6, 2025

கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுகிறது-அனுமதி கிடைத்தவுடன் திறப்போம்; வியாபாரிகள் அறிவிப்பு

 கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுகிறது-அனுமதி கிடைத்தவுடன் திறப்போம்; வியாபாரிகள் அறிவிப்பு

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்த நகராட்சி தினசரி மார்க்கெட்டை இடித்து விட்டு 250 கடைகள் கொண்ட புதிய மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது, அதுவரை மாற்று இடமாக புதியபஸ் நிலையத்தில் மாற்று கடைகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்து விட்டனர், மேலும் மார்க்கெட்டை இடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு  மத்தியில் கடந்த திங்கட்கிழமை காலை மார்க்கெட் இடிப்பு பணி தொடங்கியது. இதை தொடர்ந்து காய்கறி, பழக்கடை மொத்த, சில்லறை வியாபாரிகள் தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பு பகுதியில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில் கடைகள் அமைக்க தொடங்கி விட்டனர்,

120 மொத்த கடைகளும், 120 சில்லறை கடைகளும் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது,’ இதில் முதல் கட்டமாக  5 ஏக்கரில் 40 மொத்த கடைகளும்  40 சில்லறை கடைகளும் தகர செட் அமைத்து முதல்   நாள்வியாபாரம் செய்ய தொடங்கினார்கள் தொடர்ந்து கடைகள் உருவாக்கி வந்தன, பொதுமக்களும் ஆர்வத்துடன் காய்கறி வாங்கி சென்றனர்,.

இந்த் நிலையில் திட்டங்குளம் ஊராட்சி பகுதியில் விவசாய பகுதியில் அழித்து வணிக வளாகம் அமைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதையும் மீறி காய்கறி மார்க்கெட்  செயல்பட தொடங்கியதாக புகார்கள் எழுந்தன, இதை தொடர்ந்து  ஊராட்சி ஒன்றிய அனுமதி பெறாமல் தனியார் சந்தை நடத்த தடை விதிப்பதாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறிவித்தார். மேலும் கடைகளை காலி செய்ய சில நாட்கள் அவகாசம் அளித்தார்.

இந்த சூழ்நிலையில் வியாபாரிகள் சங்க தலைவர் அழகுராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்த மார்க்கெட் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். பேட்டி விவரம் வருமாறு:-

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த நகராட்சி மார்க்கெட்டை இடித்து கட்டப்போவதாக வந்த தகவலை தொடர்ந்து நாங்கள் அதை நிறுத்தட எவ்வளவோ முயற்சி செய்தோம். அனால் முடியவில்லை.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில்  ஜெ.சி.பி.இயந்திரங்களுடன் நகராட்சி அதிகாரிகள் வந்து கடைகளை  இடிக்க தொடங்கி விட்டனர். எங்கள் பொருட்களுடன் கடைகள் இடிக்கப்பட்டு விட்டன.

எங்களுக்கு மாற்று இடமாக புது பஸ் நிலையத்தில் கடைகள் தருவதாக சொன்னார்கள். அந்த இடம் எங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. மேலும் லாரிகள் வந்து செல்வதற்கு இடைஞ்சல் ஏற்படும். பஸ்கள் வந்து செல்லக்கூடிய இடத்தில் காய்கறி மார்க்கெட் அமைத்தால் நெருக்கடி ஏற்படும் என்பதால் நாங்கள் எங்கள் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக கடை அமைக்க முயற்சி செய்தோம்.

இந்த இடத்தில் சந்தை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகின்றன, கட்டிடம் கட்டி கடைகள் தொடங்குவதாக இருந்தோம். அனுமதிக்காக காத்திருந்தோம். அந்த சமயத்தில்  நகராட்சி நிர்வாகம் அவசரமாக எங்களை வெளியேற்றியதால் நாங்கள் தற்காலிகமாக தகர செட் கடைகள் அமைத்து வியாபாரம் தொடங்கினோம். மக்களுக்கும் மிகுந்த பயனாக இருந்தது.

இந்த சந்தையில் தற்போது கடைகளை காலி செய்வதற்கு நாளை வரை அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள். எனவே 24-ந் தேதி திங்கட்கிழமை முதல் தெற்கு திட்டங்குளம் மார்க்கெட் இயங்காது, மூடப்படும். ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு அனுமதி கிடைத்தவுடன் கடைகள் திறப்போம். அது வரை நாங்கள் வேறு எங்கும் கடைகள் நடத்த மாட்டோம்.

இந்த மார்க்கெட்டில் இருந்து தான் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான காய்கறிகள் சென்றன. திங்கட்கிழமை முதல் கடைகள் மூடப்பட்டால் காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு  விலை உயர்ந்து விடும். இந்த பிரச்சினையை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த் மார்க்கெட் மூடப்பட்டால் 400 வியாபாரிகள் , 2 ஆயிரம் பணியாளர்கள் , 500 கூலி தொழிலாளிகள் வேலை இழப்பார்கள். பொதுமக்களும் கஷ்டத்துக்கு ஆளாக நேரிடும்,

அரசின் அனுமதி கிடைத்தவுடன் மறுபடியும் நாங்கள் இங்கு கடை திறப்போம். நகராட்சி சார்பில் கட்டப்படும் சந்தையில் எங்களுக்கு 150 கடைகள் தருவதாக கனிமொழி எம்.பி.மற்றும் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்,

அந்த சமயத்தில் நாங்கள் அங்கு  சில்லறை கடைகள் உருவாக்குவோம்,.எங்கள் பணம் நகராட்சி வசம் இருக்கிறது. தெற்கு திட்டங்குளம் மார்க்கெட்டில் மொத்த காய்கறி கடைகள் இயங்கும். இந்த இடம் தான் லாரிகள் வந்து செல்ல மிகவும் வசதியாக இருக்கிறது. நகரில் நெருக்கடி ஏற்படாது.

எனவே திங்கட்கிழமை  முதல் தெற்கு திட்டங்குளம் மார்க்கெட் தற்காலிகமாக இயங்காது. உரிய அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் கடைகள் திறப்போம்,

இவ்வாறு அழகுராஜன் கூறினார்.

பேட்டியின் போது எஸ்.ஆர். பாஸ்கரன்  உள்ளிட்ட வியாபாரிகள் உடன் இருந்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *