கோவில்பட்டி தினசரி மார்க்கெட், கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது ;கனிமொழி எம்.பி.ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் உள்ள கட்டிடங்கள் சிதலமடைந்து காணப்படுவது மட்டுமின்றி, நாளுக்கு நாள் அதிகரித்து நெருக்கடியும் அதிகரித்து வருவதால், தினசரி சந்தையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்தது..
இதையடுத்து ரூ.6 கோடியே 84 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவது தொடர்பாக நகரில் பல இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா காலத்தில் அங்கு தினசரி சந்தை செயல்பட்ட காரணத்தினால் மீண்டும் அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கூடுதல் பஸ் நிலையத்தை கனிமொழி எம்பி இன்று ஆய்வு செய்தார். வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில். நகராட்சி தினசரி சந்தை புதுப்பிக்கப்பட உள்ளதால் அங்குள்ள வியாபாரிகளுக்கு கூடுதல் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும், தினசரி சந்தை புதுப்பிக்கப்பட்ட பின்னர் அங்கு அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, தாசில்தார் சுசீலா, நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகர அமைப்பு அலுவலர் ரமேஷ் குமார், சுகாதார அலுவலர் நாராயணன், திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

