• June 15, 2025

“சமுதாயத்தில் நாங்களும் மனிதர்கள் தான், எங்களை மீண்டும் காட்சிப் பொருளாக மாற்றி விடாதீர்கள்” தூத்துக்குடி திருநங்கைகள் உருக்கம்

 “சமுதாயத்தில் நாங்களும் மனிதர்கள் தான், எங்களை மீண்டும் காட்சிப் பொருளாக மாற்றி விடாதீர்கள்”  தூத்துக்குடி திருநங்கைகள் உருக்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாளையங்கோட்டை ரோட்டில் 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். பின்னர் திருநங்கைகள் மறியலை கைவிட்டனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.11.2022 அன்று பாளை மெயின் ரோடு பகுதியில் சில திருநங்கைகள் செய்த தவறுகளால் 4 திருநங்கைகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதே சம்பவத்தை கருத்தில் கொண்டு மேலும் திருநங்கைகளை கைது செய்யும் நிலை தொடரப்படுகிறது.

.திருநங்கைகள் வெளியே நடமாடினால் கூட கைது செய்யப்படும் எனக் கூறி காவல்துறையின் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். 

மேலும் வாடகை வீட்டில் வசித்து வரும் திருநங்கைகளை அவ்வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்யும்படியும் அழுத்தம் கொடுக்கிறார்கள். தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென்று அறியாமல் திருநங்கைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். மேலும் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரையும் நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. எந்த பதிலும் இல்லை. 

ஒரு மாதமாக சாப்பாட்டுக்கு வழி இல்லாத நிலையில் திருநங்கைகள் வாழ்ந்து கூட வருகிறோம். சமூகத்தில் ஒரு ஆண் தவறு செய்தால் எல்லா ஆண்களும் பாதிக்கப்படுவதில்லை. இதே போல் தான் பெண்களுக்கும் நாஙகள் மட்டும் என்ன பாவம் செய்தோம். ஒரு சில திருநங்கைகள் செய்த தவறினால் மாவட்டத்தின் ஒட்டு மொத்த திருநங்கைகளும் “வாழவா சாவதா” என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களையும் வாழ விடுங்கள். இல்லை வாழ்வதற்கான வழியை விடுங்கள். சமுதாயத்தில் நாங்களும் மனிதர்கள் தான். எங்களை மீண்டும் காட்சிப் பொருளாக மாற்றி விடாதீர்கள்”

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *