டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை எதிர்த்து 4 கட்ட போராட்டம் ; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் அனைத்து மண்டல தலைவர் ஆட்சிமன்றகுழு நிர்வாகிகள் மற்றும் சென்னை-காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.’
இக்கூட்டத்தில் தற்போது வணிகவரித்துறை மேற்கொண்டு வரும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்திடவும் வேண்டியும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திட நான்கு கட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
முதல் கட்டமாக 10-1-2023 அன்று அணைத்து வணிகர்களும் தனக்குள் கடைகள் முன்பு விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்றும் வணிகர்கள் விழிப்புணர்வு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது,
இரண்டாம் கட்டமாக வருகிற 24.1.2023 அன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மூன்றாம் கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது ,நான்காவது கட்டமாக கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் இவற்றுக்கான தேதிகள் 24..1.2023 அன்று அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு அறிக்கையில் கோவிந்தராஜுலு தெரிவித்துள்ளார்.
