• June 9, 2025

பாராளுமன்ற தேர்தலில்  40-ம் நமதே என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்”- அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் டி.ஜெயக்குமார் ஆலோசனை

 பாராளுமன்ற தேர்தலில்  40-ம் நமதே என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்”- அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் டி.ஜெயக்குமார் ஆலோசனை

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டம் முடிந்ததும்  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்  40-ம் நமதே நாடும் நமதே  என்ற அடிப்படையிலே கழக செயல்வீரர்கள்,வீராங்கனைகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய அமைப்பு கிடையாது.

புரட்சித்தலைவர் உருவாக்கிய மாபெரும் இயக்கத்திற்கு ஒரு அடிப்படை கட்டமைப்பு என்று சொன்னால் அது பூத் கமிட்டிதான். அதாவது வாக்குச் சாவடி முகவர்கள். இதனை அமைத்துத் தந்தது புரட்சித்தலைவி அம்மாதான். இன்றைக்கும் சவால் விட்டுச் சொல்கிறேன்.தமிழகத்திலே 66 ஆயிரத்து மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.அதில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும்  ஒரு பூத் ஏஜெண்ட் என்று அதற்கு ஒரு பொறுப்பாளர் என்று மொத்தம் 18 பேர் கொண்ட அமைப்பை ஏற்படுத்திய உலகத்திலேயே அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம்தான்.அதனை ஏற்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மாதான்.

மற்ற  கட்சிக்கு ஆள் பிடிக்கவேண்டும்.தேட வேண்டும். ஆள் கிடைக்க மாட்டார்கள்.ஆனால் இங்கு 1 லட்சத்துக்கு மேற்பட்ட  கிளைக் கழகங்கள் உள்ள நிலையில்  அவர்கள் தேர்தல் பணியாற்றவேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள்  கண்டுபிடித்ததுதான் இந்த அமைப்பு. தற்போது எடப்பாடி பழனிசாமியின்  அறிவுரையை ஏற்று ஒவ்வொரு மாவட்டத்திலும்  கூட்டம் போடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இங்குக் கூட்டம் போட்டு என்ன என்ன பணிகள் செய்யவேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.,இந்த ஆட்சியின் அவல நிலைகள்,தினமும் நடக்கும் கொலைகள்,அடிதடிகள்,கற்பழித்து ஆள் கடத்தல் கட்டபஞ்சாயத்து போன்றவை சர்வசாதாரணமாக நடக்கும் மாநிலம் தமிழகம் என்று எடுத்துச் சொல்லவேண்டும்.

திண்ணை பிரச்சாரத்தைக் காட்டிலும் வலிமையானது எதுவுமே கிடையாது.அந்த 18 பேர் இந்த ஆட்சியின் அவலநிலையை எடுத்துச்சொல்லவேண்டும்.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையை எடுத்துச்சொல்லவேண்டும்.அது மட்டுமல்லாமல் அம்மாவின் அரசில் செய்த சாதனைகளை மக்களிடையே எடுத்துச் சொல்லவேண்டும்.

இப்போது தாலிக்குத் தங்கம் திட்டத்தை இப்போது நிறத்திவிட்டார்கள்.இருசக்கர வாகன திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.அம்மா உணவகத்தை படிப்படியாக மூடி வருகிறார்கள்.அதுபோல அம்மா அரசில் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் மூடிவிட்டு,மக்கள் எந்தவிதமாக நலனையும் பெறாத நிலையிலே,இன்றைய அரசு மக்கள் விரோத,ஜனநாயக விரோத அரசாக உள்ளது.

ஒரு ஆர்ப்பாட்டம்,கண்டன கூட்டத்தைத் தெரிவித்தால்கூட  செயல்படுத்தாத இந்த அரசு குறித்து மக்களிடம் தெரிவிக்கவேண்டிய நிலை பூத் கமிட்டியிடம் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கூட்டங்கள் கூட்டப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது.அந்த அடிப்படையில்தான் இங்குக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி  : அ.தி.மு.க தற்போது நான்காக உள்ளது,அடுத்து தமிழகத்தில் நாம்தான் என்றுஅன்புமணி பேசியுள்ளாரே

பதில் :    கடுமையான கண்டனத்தை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்..அந்த கட்சியை ஏற்றிவிட்டது யாரு. அம்மா இல்லை என்றால் இந்த கட்சியே வெளியே தெரியாது. அம்மா கூட்டணி வைத்த காரணத்தினால்தான் அவர்களுடைய கட்சிக்கு அங்கிகாரம் கிடைத்தது.. அன்புமணி ராமதாஸ் இதனை நினைத்துப் பார்க்கவேண்டும். நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் பேசினால் தமிழக மக்கள் மட்டுமல்ல.கழக தொண்டன் மட்டுமல்ல,உங்கள் பக்கத்தில் உள்ள தொண்டன்கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.. எங்கள் தயவால்தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எங்கள் தயவால்தான் சட்டமன்றத்தின் உள்ளே வந்தீர்கள். எங்கள் தயவால்தான் நாடாளுமன்றத்தின் உள்ளே சென்றீர்கள். எங்கள் தயவால்தான் மத்திய அமைச்சர் பதவி பெற்றீர்கள். அப்படி எல்லாம் இருந்துவிட்டு இன்றைக்கு எங்கள் கட்சியைப் பார்த்து நான்காக உடைந்துவிட்டது என்றால்,இன்றைக்கு எடப்பாடியார் தலைமையிலே பலம் வாய்ந்த இயக்கமாகத் தமிழகம் முழுவதும் எழுச்சியாக உள்ளது. இப்படி உள்ள நிலையில் இதனை முழுமையாக மறைத்துவிட்டுப் பேசினால் எப்படி.? இன்றைக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இருக்கிறார்.யார் அந்த எம்.பி. பதவியை யை அளித்தார்கள். அ.தி.மு.க.தான் அளித்தது.அ.தி.மு.க.தான் அடையாளம் காட்டியது. இப்படி அனைத்தையும் மறைத்துவிட்டு இன்றைக்குக் கட்சி நான்காக உடைந்துவிட்டது என்றால் இந்த கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரின் கூற்று எள்ளி நகையாடக்கூடிய வகையில்தான் இருக்கின்றது.இதுபோன்று சிறுமைபடுத்தும் பணியில் எதிர்க்காலத்தில் ஈடுபடவேண்டாம்.அப்படி தொடர்ந்து பேசினால் தக்க பதிலடியை நாங்களும் அளிப்போம். பதிலடி அளிக்க தயங்கமாட்டோம்.ஒன்று சொன்னால் நூறாக அளிப்போம்.

கேள்வி : புதிய ஆண்டு அ.தி.மு.க.வுக்கு எப்படி இருக்கும்

பதில் : பழையன கழிதல்,புதியன புகுதல்.2 வருட தி.மு.க. ஆட்சி மக்களுக்கு புளித்துப்போய்விட்டது.எப்போது இந்த ஆட்சி தொலையும் என்ற எண்ணம் உள்ளது.இந்த எண்ணம் அரசு ஊழியர்கள் மத்தியில் வந்துவிட்டது. தமிழக மக்கள் மனதிலும் வந்துவிட்டது. 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.சென்ற இடமெல்லாம் பெண்கள் இதனை என்னிடம் கேட்கிறார்கள். டெல்லியில் நடக்கும் கூட்டத்தினால் தி.மு.க.வுக்கு வயிற்றை கலக்குகிறது. அந்த பயம் வந்துவிட்டது.அப்படித் தேர்தல் ஒன்றாக வந்ததால்  நன்றாக இருக்கும்.

கேள்வி  : திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதே

பதில்  : பொதுவாகவே தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசின் கடமை. காவல்துறையும்,அரசும் விழிப்போடு இருக்கவேண்டும்.. மறைந்த தலைவர்களின் சிலையைச் சேதப்படுத்துவது என்பது ஒரு அநாகரிகமான,ஈனத்தனமான செயல். இதனை இரும்புக் கரம் கொண்டு அடங்கி ஒடுக்கி,யாராக இருந்ததாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதின் மூலம்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எனவே இதில் அரசைப் பொறுத்தவரையில் வேறுபாடு பார்க்கக் கூடாது. மறைந்த தலைவர்கள் என்றால் எல்லோருமே ஒன்றுதான்.யாராக இருந்தாலும் அவர்களுக்கு ,இழுக்கை ஏற்படுத்தக்கூடாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *