பா.ஜனதாவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்; அண்ணாமலை மீது பகிரங்க குற்றச்சாட்டு

நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜனதாவில் இணைந்து பணியாற்றி வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார,
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22ந் தேதி காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் ” தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். ஆறு மாத காலத்திற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் ” என்று கூறி இருந்தார்.
அதற்கு பிறகு காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம், தற்போது பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பரபரப்பு கருத்தை முன்வைத்து காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி உள்ளார்
நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், “பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன். கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பா.ஜ.க.வுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் குரு, சிறந்த தலைவர். அமித் ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்” என்று பதிவிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி அமித் ஷாவை டேக் செய்துள்ளார்.
மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த முடிவு எடுக்க காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.
அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன். பெண்களுக்கான சமூக உரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
