கோவில்பட்டி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் ; 3 பள்ளிகளில் 5-ந்தேதி வரை நடக்கிறது
கோவில்பட்டி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் (24 பள்ளிகள்) 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
அதில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று தொடங்கின. கோவில்பட்டியில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது.-
கவின்கலை / நுண்கலை ( ஒவியம், கையெழுத்து, சிற்பம் செய்தல்), இசை (வாய்ப்பாடு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன்( கதை, கவிதை, பேச்சு, கட்டுரை) போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற உள்ளன,
கலைவிழா போட்டிகள் தொடக்கவிழா இன்று வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வழிகாட்டுதல்படி மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயபிரகாஷ் ராஜன்(இடைநிலை), சின்னராசு (தொடக்கநிலை), ஆகியோர் தலைமையில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கி வைக்கப்பட்டது.
ஏற்கனவே பள்ளி அளவில் நடந்த போட்டியில் புல்லாங்குழல் வாசித்து முதலிடம் பெற்ற பிளஸ்-2 மாணவர் ரூபேஷ், விழாவின் போது இரண்டு பாடல்களை புல்லாங்குழல் இசை மூலம் வெளிப்படுத்தி அசத்தினார்.
விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள், வ.உ.சி.பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகரன், கோவில்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இரா.நட்டாத்தி , ஆசிரிய பயிற்றுனர்கள், கலைத்திருவிழா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,
இந்த கலைத்திருவிழா போட்டிகள் தொடர்பாக கோவில்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இரா.நட்டாத்தி, www.tn96news.com செய்தியாளரிடம் கூறியதாவது:-
ஏற்கனவே பள்ளி அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் ஒவ்வொரு தலைப்பிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.’
இதில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் இரண்டு பிடிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,
5-ந்தேதி கலைத்திருவிழா போட்டிகள் முடிந்து மறுநாள் 6 ந்தேதி முதல் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெறும். இந்த போட்டி இதே போல் 5 நாட்கள் நடைபெறும்,
இதில் ஒவ்வொரு தலைப்பிலும் முதலிடம் பெறுபவர் தேர்ந்தேடுக்கபப்ட்டு சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்,
இதில் தேர்வு செய்யப்படும் 2 பேரில் அதாவது மாணவருக்கு கலையரசன் விருது, மாணவிக்கு கலையரசி விருது வழங்கப்படும். மேலும் முதல் 20 இடங்களை பிடிப்பவர்கள் ஏதாவது ஒரு வெளி நாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.
இவ்வாறு நட்டாத்தி கூறினார்.