• May 20, 2024

சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு: உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகள்

 சென்னை விமான நிலையத்தில் ஏற்பாடு: உள்நாட்டு, பன்னாட்டு முனையங்களுக்கு தனித்தனி வழிகள்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமான சேவை, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, விமான சேவை பெருமளவு அதிகரித்து வருகின்றன.
இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்துக்கு முன்பு 2018-ல் ஒரு நாளைக்கு சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் வந்து சென்றன. ஆனால் தற்போது சுமார் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.
இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வாகனங்களின் போக்குவரத்து மற்றும் நெரிசல் அதிகரித்து உள்ளன. சென்னை சர்வதேச முனையம், உள்நாட்டு முனையம் வரும் அனைத்து வாகனங்களும் ஒரே பகுதி வழியாக வந்து, வெளியேறுவதால் வாகனங்களின் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் நெரிசல்கள் ஏற்பட்டன.
இதை பயன்படுத்தி சில வாகனங்கள் கட்டணங்கள் செலுத்தாமல் வெளியேறி விடுகின்றன. இதை தவிர்ப்பதற்காகவும், வாகன நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை விமான நிலையத்தில் தற்போது புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி உள்நாட்டு விமான முனையத்துக்கு வரும் வாகனங்கள் ஒரு வழியாக வந்து விட்டு மற்றொரு வழியாக திரும்புவதற்கும், சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் உள்ளே வருவதற்காகவும், பின்னர் அந்த வாகனங்கள் வெளியே செல்வதற்காகவும் புதிதாக வழிகள் அமைக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே இந்த புதிய வாகன வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்வதற்காக கூடுதலாக தனித்தனியாக கட்டண சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்துக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனியாகவும், சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தனியாகவும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்படுவதால் சென்னை விமான நிலையத்தில் வாகன நெரிசல்கள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் இரவு நேரத்தில் இருந்து அதிகாலை வரை ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *