கீழக்கரை கவுன்சிலர் உள்பட 2 பேர் கைதில் திடுக்கிடும் தகவல்; ரூ.300 கோடி போதை பவுடர் கடத்தியது அம்பலம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் மண்டபம் மரைன் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த கீழக்கரையை சேர்ந்த நகராட்சி முன்னாள்
கவுன்சிலர் ஜெயினுதீன் (வயது 45), கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சார்பாஸ் நவாஸ் (42) ஆகியோர் பிடிபட்டனர்,
அவர்கள் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு உரம் கடத்தி செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது உரம் அல்ல என்றும் போதை பவுடர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
அவர்கள் வந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்கள் 30 இருந்தன. அதில் அனைத்து கேன்களிலும் போதை பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. காரில் வந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், போதை பவுடர் கேன்கள், அதை ஏற்றி வந்த கார் ஆகியவர் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிப்பட்ட போதை பொருள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இந்த போதை பவுடரை குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.