பழனி ஜவுளி கடை கொள்ளையில் திடீர் திருப்பம்; உரிமையாளர் பொய் புகார் அளித்தாரா?
பழனியில் திண்டுக்கல் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஜோதி கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் ஜோதி முருகன்.
சம்பவத்தன்று இந்த கடையில் காவலாளியை தாக்கி ரூ.2 கோடி மதிப்பிலான ஜவுளிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக ஜோதி முருகன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோவையை சேர்ந்த மொத்த ஜவுளி வியாபாரி ஒருவரிடம் ரூ. 40 லட்சத்துக்கு ஜவுளிகள் கொள்முதல் செய்திருந்த ஜோதி முருகன், நீண்ட நாட்களாக பணம் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவை வியாபாரி நேரில் வந்து ஜவுளிகளை எடுத்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் செந்தில்முருகன் வேண்டுமென்றே பொய் புகார் அளித்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாக்கப்பட்டதாக கூறப்படும் காவலாளி,, மொத்த ஜவுளி வியாபாரி ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.