ஆறுமுகசாமி கமிஷன் முடிவின் அடிப்படையில் அரசு நடவடிக்கை; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
வருகிற 30ந் தேதி அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மாலை சூட்டப்படவிருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதியும், உரிய பாதுகாப்பும் அளிக்குமாறு காவல்துறை ஆணையரிடத்திலே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- நந்தனத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது பற்றி…
பதில்:- கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் உள்நோக்கம் எதுவும் கற்பிக்கக் கூடாது.
கேள்வி:- கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து?
பதில்:- மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரிய விஷயமாகத்தான் இதனை பார்க்க வேண்டும். இது சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறக்காமல் உள்ளார். தீபாவளிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் மிகப்பெரிய அசம்பாவிதம் எதாவது நடத்த திட்டமிட்டிருக்கலாம். நல்ல வேளையாக தீபாவளி நாளில் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை. இச்சம்பவம் குறித்து தலைமைச் செயலகத்தில் தற்போதுதான் கூட்டம் நடத்தவிருப்பதாக கேள்விப்படுகிறேன்.இத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இது சம்மந்தமாக காவல்துறையினர் 75 கிலோ வெடி மருந்தினை கைப்பற்றியிருக்கிறார்கள். முதலமைச்சர் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியாக இன்றைக்கு இது இருக்கிறது.
கேள்வி:- ஓ.பி.எஸ். குறித்து…
பதில்:- கிளைக் கழகம் தொடங்கி அனைத்து நிர்வாகிகளும் கட்டுக்கோப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்படுகிறார்கள். கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், கழகத்தின் 51 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளும் தொடர்ந்து எழுச்சியோடு கழகத்தின் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஓ.பி.எஸ். என்ன செய்தார்? தற்போதுதான் இந்த குண்டு வெடிப்பு சம்மந்தமாக ஒரு கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். இது ஏதோ ஒரு வலைக்குள் இருந்துகொண்டு எட்டிப்பார்த்து கண்டனம் தெரிவித்துவிட்டு மீண்டும் அந்த வலைக்குள் ஓடி ஒளிந்துகொள்வதுபோல்தான் இருக்கிறது ஓ.பி.எஸ். நடவடிக்கை.
கேள்வி:- சசிலா குறித்து தீபா ஆடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறாரே?
பதில்:- ஓய்வு பெற்ற நீதியரசர் தெளிவாக தெரிவித்திருக்கிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இதில் எனது பங்கு எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆகியோர்தான் பொறுப்பெடுத்திருந்தார்கள். முதலமைச்சரின் அனைத்து விவகாரங்களிலும் ஓ.பி.எஸ்.தான் பார்த்துக்கொண்டிருந்தார். இவங்க இரண்டு பேரும்தான் குற்றம் செய்தவர்கள் என்ற அடிப்படையில்தான் ஆறுமுகசாமி கமிஷன் முடிவு இருக்கிறது. இந்த முடிவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதுதான் இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.
கேள்வி: ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்களே?
பதில்: எதற்குத்தான் இந்த அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது? ஆந்திராவில் சட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் கொடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு கடிதம் அந்த அரசாங்கத்திற்கு எழுதியிருக்கலாமே? ஆனால் அப்படி கடிதம் எதுவும் எழுதாமல் வாய் மூடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவங்களைப்பொறுத்தவரை யாரை பற்றியும் கவலைப்படமாட்டார்கள். அதே சமயம் தமிழ்.. தமிழ்.. என்று சொல்வார்களே தவிர தமிழர்கள் தாக்கப்படும்போது சரி, தமிழ்நாட்டு மக்கள் தாக்கப்படும்போது சரி, தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதும் சரி, தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும்போதும் சரி, இப்படி எந்த நிலையிலும் வாய் திறக்காமல் இருக்கின்ற ஒரே அரசாங்கம் அது திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம்தான்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
