கோவில்பட்டி அருகே பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; வேதனையில் தவிக்கும் விவசாயிகள்

கோவில்பட்டி அருகே குருமலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் 3 ஆயிரம் ஏக்கர் மானாவரி நிலம் உள்ளது. இங்கு விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடுவது வழக்கம். இங்குள்ள விவசாயிகளுக்கு இன்சூரன்சும் கிடையாது. பயிர் காப்பீடும் கிடையாது.
இதன் காரணமாக விவசாயிகள் மழைக்காலங்களில் பயிரிடும் பயிர்களுக்கு லாபம் கிடைக்காமல் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு குறுமலையில் உள்ள காட்டுப்பன்றிகளே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மலையில் இருந்து இரவு நேரத்தில் இறங்கும் காட்டுப்பன்றிகள் மக்காசோளம் விதைத்தவுடன் குழி பறித்து விதைகளை தின்றுவிடுகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே பயிர்கள் நசாமாகி விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள்.
காட்டுப்பன்றிகள் தொல்லையால் பாதிக்கப்படும் விவசாயிகளில் ஒருவரான வேணுகோபால் என்பவரு இது பற்றி கூறியதாவது:-
குருமலை, கழுகுசாலபுரம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் காட்டுப்பன்றிகள் தொல்லையால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். முக்கால் அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்கு குழி தோண்டி விதைகள் நடுகிறோம். விதைகள் நட்டவுடன் காட்டுபன்றிகள் இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து விடும். அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு காட்டுபன்றியும் 300 கிலோ எடை வரை இருக்கும். குறுமலையில் ஆயிரக்கணக்கான காட்டுப்பன்றிகள் இருக்கின்றன. நாளுக்கு நாள் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாங்கள் இரவு நேரத்தில் காவலுக்கு இருப்போம். காவல் நாய்களையும் அடித்து கொன்றுவிடுகின்றன. இதுவரை 15-க்கும் மேற்பட்ட வேட்டை நாய்களை அடித்து கொன்று விட்டன.
இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுபன்றிகளை விரட்ட நாங்கள் வெடி வைக்கிறோம். அதன் சத்தம் கேட்டு ஓடிவிடும். இருப்பினும் சில முரட்டு பன்றிகள் அந்த சத்தத்தையும் பொருட்படுத்தாமல் பயிர்களை நாசம் செய்து விடுகின்றன,
எனக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது., இதில் இரண்டு தடவை மக்காச்சோளம் விதைத்தேன். விதைகளை தின்று சென்று விட்டன. ஒரு ஏக்கருக்கு விதைகள் நடுவதற்கு ரூ.8,500 வரை செல்ப்வாகிறது. இப்போது மூன்றாவது தடவையாக மக்காசோளம் விதைத்துள்ளேன், இது என்ன நிலைக்கு ஆகப்போகிறதோ தெரியவில்லை,
கட்டுபன்றிகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வேலி அமைக்க கூடாது என்கிறார்கள். பயிர்களை நாசம் செய்து விட்டு சென்றால் நஷ்டஈடு கிடையாது. பயிர்களுக்கு இன்சூரன்சும் கிடையாது. அப்படியானால் எங்கள் நிலை என்ன? தொடர்ந்து நஷ்டம் அடைந்து கஷ்டப்படவேண்டியது தானா?
குருமலை வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து வருகின்றன. வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டுபன்றிகள் சேதப்படுத்தும் நிலங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் பணிவான வேண்டுகோள்.
இவ்வாறு விவசாயி வேணுகோபால் கூறினார்.
வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேதனையில் தவிக்கும் விவசாயிகள் நலன் காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்,
