• June 8, 2025

கள்ளக்காதலுக்கு இடையூறு: மீன் வியாபாரியை எரித்துகொன்ற மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது- கோவில்பட்டி அருகே பயங்கரம்

 கள்ளக்காதலுக்கு இடையூறு: மீன் வியாபாரியை எரித்துகொன்ற மனைவி, மகள் உள்பட 3 பேர் கைது- கோவில்பட்டி அருகே பயங்கரம்

கைதான சலேத்துராணி, கருப்பசாமி மற்றும் கொலை செய்யப்பட்ட ஞானசேகர் .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் தெற்கு தெருவில் வசித்தவர் ஞானசேகர் (வயது 42). மீன் வியாபாரி. இவருடைய மனைவி சலேத்து ராணி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரில் மேற்கு தெருவில் குடியிருப்பவர் சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக் (24). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாதவர்.
இந்த நிலையில் கருப்பசாமிக்கும், சலேத்து ராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஞானசேகரின் 15 வயது மகளுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் ஞானசேகருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, மகள் மற்றும் கருப்பசாமி ஆகியோரை கண்டித்தார்ர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, சலேத்து ராணி, 15 வயது மகள் ஆகியோர் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ஞானசேகரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஞானசேகர் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது கருப்பசாமி வந்தார். அவர் மிளகாய் பொடியை ஞானசேகரின் முகத்தில் தூவி கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளார். ஞானசேகரின் 15 வயது மகள் இரும்பு கம்பியாலும், மனைவி சலேத்து ராணி அரிவாளாலும் வெட்டினர்.
இந்த தாக்குதலில் ஞானசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைத்தொடர்ந்து தடயங்களை அகற்றும் முயற்சியில் இறங்கினர்.
ஞானசேகரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்தனர், வீட்டை கழுவினர். அங்கிருந்த ஆயுதங்களையும் தண்ணீரால் கழுவினர்.
பின்னர் குளித்து விட்டு ஆடைகளை மாற்றினர். வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வைத்தனர்.
கள்ளக்காதலன் கருப்பசாமி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் தன்னுடைய காரில் பெட்ரோல் கேனை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து காரில் மீன் வியாபாரி ஞானசேகரின் உடலை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். அச்சங்குளம் காட்டுப்பகுதிக்கு சென்றதும் காரை நிறுத்தி உடலை இறக்கினர். அங்கு மண்எண்ணெய், பெட்ரோல் ஊற்றி ஞானசேகரின் உடலுக்கு தீ வைத்து எரித்தனர். பின்னர் காரில் அங்கிருந்து ஊருக்கு திரும்பினார்கள்.
நேற்று காலையில் கிராம மக்கள் பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் ஞானசேகர் உடல் இருந்ததை கண்டனர். புகை மூட்டமும் இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் சீதாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஞானசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலேத்து ராணி, 15 வயது மகள், கள்ளக்காதலன் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தார்கள். மேலும் விசாரணை நடந்து வருகிறது .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *