• June 8, 2025

கோவில்பட்டி நீதிமன்றத்தில், மறைந்த வழக்கறிஞர் பரமசிவம் பெயரில் நூலகம் திறப்பு

 கோவில்பட்டி நீதிமன்றத்தில்,  மறைந்த வழக்கறிஞர் பரமசிவம் பெயரில் நூலகம் திறப்பு

கோவில்பட்டியில் மறைந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.பரமசிவம் பெயரிலான நூலகப் பிரிவு மற்றும் அவரது உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. கோவில்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வரவேற்று பேசினார்.

ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ எம்.பி., மறைந்த மூத்த வழக்கறிஞர் பரமசிவம் திருவுருவப் படத்தை திறந்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். ‘சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மறைந்த வழக்கறிஞர் பரமசிவம் பெயரிலான நூலக பிரிவை திறந்து வைத்தார்.
முன்னதாக, நீதிபதி புகழேந்தி வழங்கிய சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை, மூத்த வழக்கறிஞர்கள் சந்தானம், பாப்புராஜ் ஆகியோரிடம் நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி வரவேற்று பேசுகையில் கூறியதாவது:-
கோவில்பட்டி நீதிமன்றத்தில் தான் எனது பணியை தொடங்கினேன். நான் வழக்கறிஞர் பணிக்கு வர காரணம், மறைந்த மூத்த வழக்கறிஞர் எனது சித்தப்பா பரமசிவம் தான். சென்னை உயர்நீதிமன்ற கிளை மதுரைக்கு வந்த பின்னர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு சென்னை சென்று வாதாடினோம். காரணம், எனது சித்தப்பா பரமசிவம் தான்.
ஆங்கிலத்தில் பேச்சுத்திறன் குறைவு என்பதால், பலரும் உயர்நீதிமன்றத்தில் வாதாட தயக்கம் காட்டுகின்றனர். என்னை பரமசிவம் உயர்நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றார். நீதிபதி ராஜேஸ்வரன் 2வது குருவாக இருந்து, என்னை உயர்நீதிமன்ற நீதிபதி வரை ஆக்கி சென்றார்.
பரமசிவமும், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவும் நண்பர்கள். வைகோவும், கோவில்பட்டியில் வழக்கறிஞர் பணியை தொடங்கி, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்பவர். 200 எம்.பி.க்களும், வைகோவும் சமம் என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வைகோவை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புகழ்மிக்க வைகோ இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. கோவில்பட்டியில் வழக்கறிஞர் பணியை தொடங்கி, நீதிபதி, மூத்த வழக்கறிஞர் என பலர் இவ்விழாவில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி. நூலகத்தை பயன்படுத்தி, சட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பேசுகையில், ‘மூத்த வழக்கறிஞர் பரமசிவமும், நானும் கல்லூரி நண்பர்கள். கோவில்பட்டி கோர்ட்டில் இருவரும் பணியாற்றி உள்ளோம். நீதி எல்லோருக்கும் உரியது. மக்கள் மன்றத்தின் தீர்ப்பு தான் முதன்மையானது. 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு நீதி இருந்தது. நீதியை மதிக்கும்‌ மாண்பு இங்கு உள்ளது. நீதிமன்றங்களில் போராடியவர்கள், நீதிக்காக போராடியவர்கள், மனித குலத்திற்காக போராடியவர்கள் பலர் உள்ளனர். கோவில்பட்டி ‌கோர்ட்டு புகழ்வாய்ந்தது’‌ என்று குறிப்பிட்டார்.
கூடுதல் தமிழக அரசின் தலைமை கூடுதல் வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், முன்னாள் உதவி மத்திய அரசு துணை தலைமை வழக்கறிஞர் கதிர்வேல், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோர் மறைந்த வழக்கறிஞர் பரமசிவத்தினுடனான அனுபவங்களை நினைவுகூர்ந்து பேசினர்.
நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் பாண்டி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், விரைவு நீதிமன்ற நீதிபதி முகமதுசாதிக் உசேன், குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் கடற்கரை செல்வம், பீட்டர் மற்றும் தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் , ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர். எஸ் ரமேஷ்,, இளைஞர் அணி செயலாளர் விநாயக ரமேஷ், நகரச் செயலாளர் பால்ராஜ், ஐந்தாவது தூண் தலைவர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *