தேவர் ஜெயந்தி: 13 கிலோ தங்க கவசம் ஒப்படைப்பது யாரிடம்?

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின் சிலைக்கு, அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கடந்த 2014 -ல் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார்.
இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜெயந்தி விழாவின்போது இந்த தங்க கவசம் அணிவிக்கப்படும். நினைவிட பொறுப்பாளா் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டு இந்த தங்க கவசத்தை, ஜெயந்தி விழாவுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் குருபூஜை வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜையின் போது அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வங்கியில் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், வங்கி நிர்வாகம் கவசத்தை யாரிடம் ஒப்படைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பிரச்சினை ஏற்பட்டால் கோர்ட்டுக்கு செல்லக்கூடிய நிலையும் ஏற்படலாம்.
