ஓட்டப்பிடாரத்தில் புதிய நீதிமன்றம்; மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதி பொதுமக்கள் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என சுமார் 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய நீதிமன்றங்களை பிரித்து ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், தட்டப்பாறை, தருவைகுளம், மணியாச்சி, புளியம்பட்டி, பசுவந்தனை, எப்போதும் வென்றான், மணியாச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையம், நாரைக்கிணறு, கடம்பூர் மகளிர் காவல் நிலையம் ஆகிய 11 காவல் நிலைய எல்கைகளை உள்ளடக்கி ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்கு சாலை செல்லும் ரோட்டில் தனியார் கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ளது

.
இந்நீதிமன்றத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி கலந்து கொண்டு நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு, முப்பிலிவெட்டி பகுதியில் அரசு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினை, தூத்துக்குடி மாவட்டம் முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி ஆட்சியர் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
