அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கம்: தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்ற எடப்பாடி பழனிசாமி உத்தரவு; அ.ம.மு.க.வுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை- டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
51வது ஆண்டு தொடக்கம்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1972 ல் எத்தனையோ சோதனைகளுக்கு இடையே தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் தீய சக்தி என்ற கருணாநிதி குடும்பத்திலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற வகையில் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக்காக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் 51வது ஆண்டு தொடங்குகிறது.
இந்த வேளையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், தலைமைக்கழகத்தில் 17 ம் தேதி காலை 9 மணியளவில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதன் பின்பு தொண்டர்களை சந்திக்கிறார்.
பொதுவாகத் தமிழகம் முழுவதும் கழகத்தினருக்கு சுற்றறிக்கை மூலமாக ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.எங்கு எல்லாம் கழகத்தின் கொடிக் கம்பம் உள்ளதோ அதனை எல்லாம் வண்ணம் அடித்து புத்தொளி வீசுகின்ற வகையில் கழகத்தின் கொடி பறக்கவேண்டும் என்ற வகையில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் உள்ள புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மாவின் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்படவேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் அம்மாவின் அரசு இருக்கின்றபோது உயர்கல்வி மன்ற வளாகத்தில் அம்மாவின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு தினந்தோறும் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த விடியா தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்தவுடன் அதனைப் பூட்டிவிட்டார்கள்.யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை நாங்கள் பராமரித்துக் கொள்கிறோம் என்று கடிதம் அளித்தோம். அதற்கும் அனுமதி தரவில்லை. இப்போது பராமரிப்பது பொதுப்பணித்துறை என்றும் விழாவை நடத்துவது செய்தித்துறை என்றும் அரசாரணை வெளியிட்டுள்ளார்கள்.
இப்போது உள்ள நிலையில் வரும் 17 ம் தேதி அம்மாவின் திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பிலே மாலை அணிவிக்கப்படவேண்டும். அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற வகையில் 12 மணிக்கு வாருங்கள் என்று நிர்வாக பொறியாளர் கூறினார். நானே அவரிடம் பேசினேன். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்டேன்.ஆனால் அவர் சீட்டில் இல்லை.எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஒரு நிர்வாக பொறியாளரை தேட வேண்டிய நிலைமை உள்ளது. தமிழகத்தின் முன்னாள் பேரவைத் தலைவர்,15 வருட அமைச்சர், ராயபுரத்தில் தொடர்ந்து 5 முறை தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். நானே நிர்வாக பொறியாளரை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றால் இந்த விடியா அரசில் எப்படிப்பட்ட நிலை உள்ளது என்று பாருங்கள்.
அதற்குப் பிறகு சி.இ.யை பார்த்து மனுவை அளித்துள்ளேன். அப்பாயின்மென்ட் அளித்துவிட்டு அற்பத்தனமான வஞ்சக எண்ணத்தோடு அரசு உள்ளது என்பதை நிச்சயமாக இதன் மூலம் பார்க்க முடியும்.
எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். மனுவை வாங்கக்கூட ஆள் இல்லாத நிலையில்தான் ஆட்சி நடந்துவருகிறது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது
கேள்வி :- தி.மு.க. பா.ஜ.க.வைதான் எதிர்க்கட்சியாக நினைக்கிறது என்று அண்ணாலை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அ.தி.மு.க. இல்லையாம்.
பதில் : அவர் ஆயிரம் சொல்லட்டும். அவரின் கட்சியை வளர்க்க அவர் அப்படிதான் தெரிவிப்பார். உண்மையான எதிர்க்கட்சி யார் என்று மக்களுக்குத் தெரியும். இந்த அரசைப் பொறுத்தவரையில் அன் பாப்புலர் ஆகிவிட்டது. இன்றைக்குச் சட்டம் ஓழுங்கு சீர்கெட்டுள்ளது. விலைவாசி பிரச்சனை,சொத்துவரி உயர்வு.மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு போன்றவை இந்த ஆட்சியின் அவல நிலை.
கேள்வி :- .நீங்கள் ஒரு முன்னாள் பேரவைத் தலைவர்.தற்போது உள்ள பேரவைத் தலைவர் ஓ.பி.எஸ் அளித்த கடிதத்தையும்,எடப்பாடி கே.பழனிசாமி அளித்த கடிதத்தையும் படிக்கவில்லை என்கிறார்.ஒரு முன்னாள் பேரவைத் தலைவராக இன்னாள் பேரவைத் தலைவருக்கு ஏதாவது கோரிக்கை வைக்கிறீர்களா?
பதில் : நான் ஏன் அவருக்குக் கோரிக்கை வைக்கவேண்டும். விதிப்படிதான் இயக்க முடியும். விதிப்படி அவர் இயக்கவில்லை என்றால் வரலாறு மரவை மீறிப் பேரவைத் தலைவர்,கண்ணியத்தை மீறிய பேரவைத் தலைவர் சட்டத்தை மதிக்காத பேரவைத் தலைவர் என்றுதான் பெயர் வரும். உயர்நீதிமன்றத்தால் ஓ.பி.எஸ் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சியில் இல்லாத ஒருவருக்குக் கழகத்தின் வரிசையில் எப்படி இடம் ஒதுக்க முடியும். .ஓ.பி.எஸ் உள்ளிட்ட நான்குபேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளதே. அதன் அடிப்படையில்தான் பேரவைத் தலைவர் நிச்சயம் செயல்பட முடியும். அந்த அடிப்படையில் அவர் மரபைக் காப்பவரா,மீறுபவரா,சட்டத்தை மதிப்பவரா,மீறுபவரா,விதியை மீறுபவரா அனைத்தும் 17ம் தேதி தெரியும்.
அ.ம.மு.க.வுடன் கூட்டணி
.கேள்வி : தி.மு.க.வை அழிக்கவேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் தயார் என்றும் கட்சியோடு இணைய வாய்ப்பு இல்லை என்று அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளாரே
பதில் :ஏற்கனவே கட்சியின் சார்பில் எடப்பாடியாரே அதுபோல என்னைப் போன்றவர்களும் சரி எல்லோரும் ஒரு மித்த கருத்தைத் தெரிவித்துவிட்டோம். அந்த வாய்ப்பே இல்லை. வாய்ப்பு இல்லை எனும் போது அவர் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டு வைத்துக்கொண்டு,சசிகலாவோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர் தேர்தலைச் சந்திக்கட்டும். இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை.
கேள்வி : தி.மு.க. உங்களின் பொது எதிரிதானே.அப்படி இருக்கும்போது டி.டி.வி.யோடு இணைந்து செயல்பட என்ன தயக்கம்
பதில் : -அதற்கு அவசியமே கிடையாது.,அப்படி என்ன அவர்கள் ஒரு மிகப்பெரிய சக்தி. அவர்கள் புறக்கணிப்பட்ட சக்தி. தமிழக மக்களாலும் சரி,கழகத்தாலும் சரி புறக்கணிக்கப்பட்ட சக்திதான் சசிகலா,டிடிவி தினகரன்.அதுபோல தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட சக்தியும்,பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்ட சக்திதான் ஓ.பி.எஸ். இதுபோன்ற நிலைமையில் எப்படி இதனை ஏற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யாரோடு வேண்டுமானாலும் நட்புவைத்துக்கொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரையில் அந்த பேச்சுக்கே இடமில்லை. இதனை அவர்கள் மறந்துவிடவேண்டும். இதுபோன்ற நிலை 100 சதவீதம் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
