• June 6, 2025

கத்திமுனையில் ரத்தம்…(சிறுகதை)

 கத்திமுனையில் ரத்தம்…(சிறுகதை)

நள்ளிரவு 12 மணி…அமாவாசை இருட்டு…மழை கொட்டிக்கொண்டிருந்தது.. ரோட்டில் தண்ணீர் பெருகி ஓடியது… ஆள் நடமாட்டமே இல்லை.
டிப்டாப் உடை அணிந்த இளைஞன் கையில் சூட்கேசுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். மழை நீர் அவன் மேல் விழுந்து தெறித்தது.
முகத்தில் வழிந்த மழை நீரையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவனது கால்கள் வேகமாக நடந்தன. கூர்க்கா விசில் அடித்தபடி அங்கு வந்தார். டிப்டாப் இளைஞன் மீது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. விசிலை ஊதிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு குடை பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

டிப்டாப் இளைஞன் எதையும் கண்டு கொள்ளாமல் நடந்தபடி வேகமாக சென்றான். 12-ம் நம்பர் வீடு..எங்கே..என்று அவன் கண்கள் தேடின. முதல் தெருதானே..இருட்டில் வீட்டை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. காலையில்தானே நோட்டமிட்டு சென்றோம். அவள் சிரித்தபடி சென்றாளே..ஆ..அந்த வேப்பமரம்..அதான் அந்த வீடு..மின்சாரம் தடைபட்டதால் எங்கும் இருள்மயம்..பேக்கிலிருந்து சின்ன டார்ச் லைட்டை எடுத்தான்.
டார்ச்லைட்டை அடித்தபோது அந்த சின்ன வெளிச்சத்தில்..12-ம் நம்பர் பளிச்சென்று தெரிந்தது. ஆ..இதுதான் நான் தேடும் வீடு..இரும்பு கேட்டு..ஏறிக்குதித்தான். டார்ச்லைட்டை மெல்ல அடித்து முதல்மாடிக்கு தாவினான். சூட்கேஸ் கீழே இருந்தது. பைக்குள் கையுறை ,முகமூடி,சின்ன கத்தி..இருந்தது.
மாடிக்கு சென்றவன் ஜன்னலை மெல்ல திறந்தான்.டார்ச்லைட்டை அடித்தபோது..போர்வையை மூடி ஒரு பெண் படுத்திருப்பது தெரிந்தது. ஆ..அவளாகவே இருக்கவேண்டும்.. விடக்கூடாது.எப்படி உள்ளே போவது..பின்பக்க கதவை தள்ளினான்.திறந்து கொண்டது.சரியாக பூட்டவில்லையா…ம்..மெல்ல..மெல்ல உள்ளே நடந்தான்..ம்..காதலித்துவிட்டு ஏமாற்றப்பார்க்கிறாயா…விடமாட்டேன்..உன்னை…மனம் துடித்தது.
கையுறையை மாட்டினான்.முகமூடியை அணிந்தான்.கையில் அந்த கூர்மையான கத்தி பளபளத்தது..ம்..போர்வையால் மூடியிருந்த உருவத்தை நெருங்கினான்.ம்..ஒரே குத்து..சத்தம் கேட்கக்கூடாது..குளோசாகணூம்..ம்..டார்ச்லைட்டை அடிக்கக்கூடாது..ஒருவேளை முழிச்சிட்டா..காரியம் கெட்டுப்போகும்..ம்..பிளான் பண்ணி சரியா காரியத்தை முடிக்கணும்..ம்..
போர்வையால் மூடியிருக்கு..இதுதான் தலைப்பாகம்..அப்படின்னா..ஒரு அடி தள்ளி இதயம் இருக்கணூம்..என்னை ஏமாற்றிய இதயம் இருக்கக்கூடாது..அதுதுடிக்கக்கூடாது. அவன் நெருங்கினான்.
இன்றோடு அவள் கதை முடிந்தது.ஓங்கி கத்தியால் குத்தினான்.சத்தம் இல்லை.மறுபடியும் குத்தினான்.அப்போது கூர்க்கா விசில் சத்தம் வேகமாக கேட்டதால் அந்த இளைஞன் திடுக்கிட்டான்.
இனி இங்கே இருக்கக்கூடாது..காரியத்தை முடிச்சாச்சு.. தூக்கத்திலே உயிர் போயிருக்கும்.இருட்டில் சரியாக தெரியவில்லை.ம்..அதை பாரக்க இது நேரம் இல்லை.ம்..ஓடு..ஓடு..அவன் மனம் எச்சரித்தது.ம்..முதல் மாடியிலிருந்து இறங்கி கேட்பக்கம் வந்தான்.கையுறை ,முகமூடியை கழற்றிவைத்தான்.கத்தியை மடக்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.இடையில் யாரும் மடக்கினால்.கத்தியை எடுத்து சொருகிடவேண்டியதுதான்.ம்..டார்ச்லைட்டையும் சூட்கேசில்வைத்தான் பூட்டினான்.சூட்கேசுடன் கேட்டை தாண்டி குதித்தான்.
எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அவன் காலை கவ்வியது.வலிதாங்க முடியாத அவன், பேண்ட் பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்து குத்த நாய் அலறிக்கொண்டு ஓடியது. விட்டா போதும் என்று அந்த இளைஞன் கத்தியை மடக்கி பாக்கெட்டில் போட்டபடி வேகவேகமாக நடந்தான்.
மழை நின்றபாடில்லை…தண்ணீரில் சதக் பொதக் என்று நடந்தான்.எதிரே போலீஸ் வேன் ஒன்று வர.. ஒரு சந்தில் பதுங்கினான். வேன் சென்றபின்…மீண்டும் நடந்தான்..நடந்து கொண்டே இருந்தான்..அவன் தங்கியிருந்த லாட்ஜ் வந்தது.
ஆ..என்ன மழை…என்று சொல்லியபடி தனது அறையை நோக்கிவிரைந்தான். என்னசார்..மழையில் நனைஞ்சிட்டியளா..வரவேற்பாளர் கேட்க..ஆமா..ஆமா என்று தலையாட்டியபடி தன் அறையை நோக்கி விரைந்தான். பேண்ட்பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து கதவை திறந்தான்.ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்ததால் லாட்ஜில் விளக்கு எரிந்தது.. அப்பாட..ஒருவழியா வந்தாச்சு..கதையை முடிச்சாச்சு.
நான் பலபெண்களை ஏமாற்றியிருக்கேன்..என்னை ஏமாற்றப்பார்க்கிறாளா..நாளைக்கு பேப்பரில் செய்திவரும். அப்போ தெரியும்..ஆ..அந்த கத்தியை கழுவிடணும்..வாஷ் பேஷனை நெருங்கினான்.பேண்ட்பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்தான்.மடக்கியிருந்த கத்தியை நிமிர்த்தியபோது…அதில் ரத்த துளிகள்..ஆ..இது அந்த ஏமாற்றுக்காரியின் கடைசி துளி ரத்தம்…
குழாயில் தண்ணீரை திறந்துவிட்டான்.கத்தியிலிருந்த ரத்தம் தண்ணீரில் கலந்து ஓடியது…ஆ..அதிகாலையிலே எழுந்து போயிடணும்..இங்கே இருக்ககூடாது.போலீஸ் மோப்ப நாய் வந்தாலும் வரும்.வேறு இடத்துக்கு போயிடணும்..ம்..
சிகரெட்டை பற்றவைத்தான்.அவன் சிந்தனை சிறகடித்தது.கத்தியை எதாவது குளத்தில் வீசிடணூம்..எந்த தடயமும் சிக்கிடக்கூடாது..உஷாரா இருக்கணும்.எங்கே போலாம்.ரெயில்ல எங்காவது போவோம்..ஒருவாரம் கழித்து வருவோம்..யாருக்கும் சந்தேகம் வராது..லாட்ஜிலே ஊருக்கு போயிட்டுவர்ரேன்னு சொல்லிட்டு கிளம்பிடுவோம்..நம்பிடுவாங்க…
இப்படி பல திட்டங்கள் போட்டான்.நேரம் போய்க்கொண்டிருந்தது.சிகரெட்டு காலியாகிக்கொண்டிருந்தது.பேண்ட் சட்டையை கழற்றி லுங்கிக்கு மாறியவன் கொஞ்சம் படுப்போம் என்று விளக்கை அணைத்துவிட்டு படுத்தவன் தூங்கிவிட்டான்.திடீரென்று விழித்தபோது..மணி ஐந்தை நெருங்கியது.ஆ..ஆபத்து என்றபடி துடித்து எழுந்தவன் பாத்ரூமுக்குள் சென்று குளித்துவிட்டு வேகவேகமாக பேண்ட்சட்டையை மாட்டிக்கொண்டு சூட்கேசுடன் மின்னல் வேகத்தில் கதவை பூட்டிவிட்டு வரவேற்பாளரிடம் தகவலை சொல்லி சாவியை கொடுத்துவிட்டு வெளியே நின்ற ஆட்டோக்காரரை எழுப்பி ரெயிலை பிடிக்கணுமுன்னு சொல்லி வேகமாக ஏறினான்.
எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு விரைந்தான்.ஆட்டோக்காரரிடம் பணத்தை கொடுத்துவிட்டு ரெயில் நிலையத்துக்குள் சென்றான்.எங்கே போக டிக்கெட் எடுக்கலாம் என்று நினைத்தவன்..யோசனையில் இருந்தான்.விடியட்டும் காத்திருப்போம் என்று நினைத்தவன் ரெயில் நிலைய வாசலில் நின்றான்.மணி ஆறாகியது..அவன் மனசு அலை பாய்ந்தது.எங்கே போகலாம்..சரியான பதிலை மனம் சொல்லவில்லை.
திடிரென்று ரெயில் நிலையத்திலிருந்து வந்த பயணிகளை பார்த்த அவன் திடுக்கிட்டான்.அவன் கொலை செய்ததாக நினைத்த ராதா தன் தோழியுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.அவன் கண்களை அகலவிரித்து பார்த்தான்.அதே ராதாதான்.எப்படி இங்கே..அவனுக்கு தலை சுற்றியது.
ராதாவுக்கு தெரியாமல் அவன் பதுங்கினான். ராதா ..அவள் தோழியிடம்.ஏண்டி உன்னைவிட்டு ஒருநாள் கூடபிரிஞ்சு இருக்கமுடியல..தனியா வீட்டிலே இருக்க பயம்.அதான் நேற்று பல்லாவரத்திலே இருக்கிற எங்க மாமா வீட்டுக்குப்போயிட்டேன். காலையிலே உன்னை பார்க்கிறதுக்காக ரெயில் நிலையத்துக்கு வந்திட்டேன் என்றாள்.
உடனே அவள் தோழி..பதட்டத்துடன்..ஏண்டி மாடி பின்பக்க கதவு சரியா பூட்டாதே..அப்படியே விட்டுட்டு வந்துட்டியா..வீட்டிலே இருக்கிறதை எவனாவது திருடிட்டு போயிட்டால் என்ன பண்ணுவா..என்று கேட்டாள்.
ராதா சிரித்தபடி..ஏண்டி நான் உஷாரான ஆளுன்னு உனக்கு தெரியாதா..வீட்டில ஆள் இருக்கின்னு காட்டுறதுக்காக..தலையணை ஒண்ணா அடுக்கி போர்வையைபோட்டு மூடிட்டேன்.பார்த்தா யாரோ ஒரு ஆள் தூங்கிக்கிட்டு இருக்கிறமாதிரி தெரியும்.திருடன் வந்தான்னா..ஆள் இருக்கின்னு போயிடுவான்ல..என்று சொல்லி சிரித்தாள்..
தோழியும் சேர்ந்து சிரித்தாள்..சரி உன்னை ஒருத்தன் சுத்திவந்தானே..அவன் என்ன ஆச்சி..என்று அவள் கேட்க..ராதா சூடானாள். அவன் பிராடு..பலரை ஏமாற்றி இருக்கான்.போலீசில புகார் பண்ணியிருக்கேன். சீக்கிரம் கம்பி எண்ணுவான்..என்று சொன்னாள்.
அங்கே வந்த ஆட்டோவில் ராதாவும் அவள் தோழியும் ஏறினார்கள். ஆட்டோ பறந்தது. அதை பார்த்த இளைஞனுக்கு ..நெஞ்சை யாரோ அழுத்துவது போலிருந்தது…
அப்போ கத்தியிலிருந்த ரத்தம்…யாருடையது. வீதியில் வாயில் ரத்தம் சொட்ட சொட்ட அலறியபடி ஓடிக்கொண்டிருந்தது அந்த நாய். தன் காலை கவ்விய நாயை நினைத்த இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. காலை தடவிப்பார்த்தவன் வெகு தூரத்துக்கு செல்லும் ஒரு ரெயிலுக்கு டிக்கெட் எடுத்தான்…!
–வே.தபசுக்குமார்.முள்ளன்விளை,தூத்துக்குடி–

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *