கடம்பூர் பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி தேர்வு; போட்டியின்றி உறுப்பினராகி தி.மு.க.வில் சேர்ந்தவர்

கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் படி 9 வார்டுகளுக்கு கடந்த மாதம் 29 ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இம்மாதம் 1ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. 1 சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
மொத்தமுள்ள 12 வார்டுகளில் திமுக -6, காங்கிரஸ் – 1, மதிமுக -1 , சுயேட்சை 4 இடங்களை பிடித்தனர்.
இதில் போட்டியின்றி தேர்வு பெற்ற நாகராஜா, ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகிய 3 சுயேட்சை வேட்பாளர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். நேற்று முன்தினம் உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் 2 வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி நாகராஜா மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இதனால் ராஜேஸ்வரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவருக்கான தேர்தல் இன்று மதியம் நடைபெறுகிறது.
