நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் சுருட்டியவர் கைது

நகைச்சுவை நடிகர் போண்டா மணி தன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஏழ்மையில் தவித்த அவருக்கு சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் பெஞ்சமின் சமீபத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து பல திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என உதவி செய்து வந்தனர். மருத்துவமனையில் உயரிய சிகிச்சைக்கு அமைச்சர் மா.சுப்பிரமனியன் ஏற்பாடு செய்தார். இதை தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய போண்டா மணி ஒய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது போண்டா மணிக்கு மருந்துகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போண்டா மணியின் மனைவி தேவியிடம் ஏ.டி.எம். கார்டை பெற்றுச்சென்ற ராஜேஷ் பிரித்தீவ் திரும்பி வரவில்லை. மேலும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போரூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை சுருட்டிய ராஜேஷ் பிரித்தீவை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
