கோவில்பட்டி அருகே கி.ராஜநாராயணன் படித்த பள்ளிக்கூடம் புனரமைப்பு பணிகள்; ஆட்சியர் பார்வையிட்டார்

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன்(கி.ரா.) கடந்த 2021-ம் மே 18-ல் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவல் கிராமத்தில் தமிழக அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் படித்த பள்ளியான இடைசெவலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் பள்ளியில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளியின் முகப்பு சுவர், உட்பகுதியில் உள்ள சுவர்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் வகுப்பறை சுவர்கள் உள்ளிட்டவைகளும் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளன.

தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ் இடைசெவல் கிராமத்துக்கு வந்து பள்ளியில் நடைபெற்று வரும் பணிகளை இன்று பார்வையிட்டார்.
மேலும் பள்ளி முழுவதையும் நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் சரவணன், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சுப்புலட்சுமி, எழுத்தாளர் கி.ரா. மகன் பிரபி மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
