ஓசிப்பயணம்: பஸ்களில் செல்லும்போது பெண்கள் அவமானப்படுகிறார்கள்-டி.ஜெயக்குமார் சொல்கிறார்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி :- தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். பஸ் பயணத்தை ஓசி பயணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே..?
பதில் :- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு உன்னதமான திட்டம் தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றி எல்லோருக்கும் ஒரு சவரன் தங்கத்தை அளித்தார். இந்த திட்டத்திற்கு ரூ. 7 ஆயிரம் கோடியை செலவு செய்தார். அம்மாவால் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் மக்களால் அமோக ஆதரவைப் பெற்றது. இந்த திட்டத்தை மூடி விட்டார்கள். யானை பசிச்கு சோள பொறி போல தாலிக்குத் தங்கம் திட்டத்தை மூடிவிட்டு கல்லூரியில் படிக்கும் மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்கள்.
அதுபோல விலையில்லா பொருட்களை நாங்கள் அளித்தோம். இலவசம் என்றால் அது கொச்சைப்படுத்துவதுபோல என்பதால் ஒரு மதிநுட்பம் வாய்ந்த தலைவராக அம்மா விலையில்லா என்று பெயர் வைத்தார். ஆனால் இந்த ஆட்சியில் ஓசி,ஓசி,ஓசி. நான் விளையாட்டாகச் சொன்னேன் என்று அப்படியே அந்தர் பல்டி அடித்தார் அமைச்சர் பொன்முடி. விளையாட்டாகச் சொல்லக்கூடிய வார்த்தையா அது.இன்றைக்குப் பெண்கள் பஸ்களில் செல்லும்போது அவமானப்படுகிறார்கள். ஓசியில் ஏறி வந்துவிட்டீர்களா என்று கிண்டல் செய்கிறார்கள். இதுபோன்ற நிலைமையை உருவாக்கியது யாரு.அமைச்சர் பொன்முடிதானே உருவாக்கினார். முதலமைச்சராக இருக்கின்ற ஸ்டாலின் அவரை கூப்பிட்டுக் கண்டிக்கவேண்டும்.
அதேபோல அமைச்சர் நேருவைக் கண்டிக்கவேண்டும்.ஆதிதிராவிட மேயர் என்றால் அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதா உங்களுக்கு. மேயரை ஒரு பண்ணையார் பாணியில்,அதிகார தோரணையில் பேசுவது யாருக்கும் சகிக்கவில்லை.அமைச்சர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும்.,நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அதேபோல உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு அராஜகம்,அத்து மீறல் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்துகொண்டுவருகிறது. முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பொதுமக்களைப் பாதிக்கின்ற அளவுக்குப் பேசினால் நான் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று ஸ்டாலின் சொல்வரா.இதற்கு ஒரு அறிக்கை விடுகிறார். அழைத்துக் கண்டிப்பதை விட்டுவிட்டு அறிக்கை வெளியிடுவதா. தன்னுடைய கட்சியினரை முழுமையாகக் காப்பாற்றி அவர்கள் செய்கின்ற அடாவடித் தனத்தை ஊக்கப்படுத்தும் விதமாகதான் முதல்வரின் செயல்பாடு உள்ளது.
கேள்வி :- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் குறித்து டி.டி.வி. தினகரன் தொடை நடுங்கி என்று விமர்சனத்தை முன்வைத்துள்ளாரே….
பதில் :- யார் தொடை நடுங்கி என்று உலகத்திற்குத் தெரியும். நான்கு வருடம் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி,காவல்துறைக்கு நேஷனல் அவார்டு வாங்கக்கூடிய அளவுக்கு வல்லமை பெற்ற சிறந்த நிர்வாகத்தை வழங்கியவர் எடப்பாடியார். அம்மாவின் வழியில் சட்டத்தின் ஆட்சி நடத்தியவர் எடப்பாடியார். தினகரனைப் பொறுத்தவரையில் தொடை நடுங்கியாக இருக்கலாம். மற்றவர் மீது குறைசொல்வது என்பது நான் அதுபோல இருந்தால்தான் அதுபோல வார்த்தை வரும்.
கேள்வி :- முன்னாள் அமைச்சர்கள் தி.மு.க.வுடன் மறைமுகமாக உறவு வைத்துள்ளார்கள் என்று ஓ.பி.எஸ். தரப்பினர் தெரிவித்துள்ளார்களே
பதில் : – சொல்வது யார். உத்தமனிடம் இருப்பவர் சொல்கிறார். உலக உத்தமன் யார் என்றால் அது ஓ.பி.எஸ்.தான். ஊரை அடித்து உலையில் போட்டு செல்வந்தர் ஆனவர்.கருணாநிதிக்கும்,ஸ்டாலினுக்கும் ஜிங் சாங் அடித்து,ஆட்சியின் சுகங்களை எல்லாம் அனுபவித்துவிட்டு,இன்றைக்குக் கட்சிக்கு விரோதமான செயல்களை எல்லாம் செய்துகொண்டு ஸ்டாலினுக்கு ஒத்து ஊதி பக்க பலமாக இருந்து அவரின் குரலாக ஜே.சி.டி. பிரபாகர் எழுப்பியுள்ளார். இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படுகிறவர்கள் நாங்கள் கிடையாது. எடப்பாடியார் உத்தரவின் பேரில் அண்ணா பிறந்தநாள் கூட்டங்களை 75 மாவட்டங்களில் நடத்தினோம். ஓ.பி.எஸ். தரப்பினரால் ஒரு கூட்டமாவது நடத்த முடியுமா. 75 மாவட்டத்தில் நடத்தச் சொல்லுங்கள் பார்க்கலாம். நடத்த முடியாது.தொண்டர்கள் இல்லை.தொண்டர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையிலே,இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கின்ற தி.மு.க.வுக்கு முழுக்க,முழுக்க பக்கவாத்தியம் வாசிக்கின்றவராகத்தான் ஓ.பி.எஸ். இருக்கிறார்.உத்தமர் போலத் தன்னை காட்டிக்கொள்வதுதான் ஓ.பி.எஸ்.ஸின் சுய ரூபம்.
கேள்வி :-அரசியல்கட்சிகள் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அதனுடைய செலவினங்களை வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளதே
பதில் :– நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைச் சொல்லி,பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்தான் தி.மு.க.வினர்.இதுதான் திமுக. எங்களைப் பொறுத்தவரையில் எது செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம். எது செய்ய முடியுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம். எங்கள் அரசின் செலவு குறித்து நிச்சயமாக எங்களால் சொல்ல முடியும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
