கோவில்பட்டியில் ஜி.கே.வாசன்; தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவில்பட்டி வந்தார். ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார்கள். அதை உங்கள் மத்தியில் தெரிவிக்கிறேன். பயிர் காப்பீடு திட்டத்தில் சில பயிர்கள் அமல்படுத்தவில்லை என்ற குறை விவாயிகள் மத்தியில் இருக்கிறது. எனவே விடுபட்ட பயிர்களுக்கு வேளாண்மை இன்சூரன்சு கிடைக்ககூடிய வகையில் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் சிறு தொழில் என்பது மிக முக்கியம். மாவட்ட வளர்ச்சிக்கு சிறு, குறு தொழில் செய்பவர்களின் பணி மிக உயர்ந்த பணியாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக, வேலைவாய்ப்பு ரீதியாக உயர்த்தகூடிய பணியை அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் பல உதவிகள் தேவைப்படுகிறது, அதை உறுதி செய்யும் வகையில் சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படவேண்டும்.
வைப்பாற்றில் உயர்நீதி மன்ற வழிகாட்டுதலை மீறி மணல் அள்ளும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதை தடுக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஈடுபடும்போது அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக காவல்துறையை வைத்துக்கொண்டு அடக்குமுறை செய்து மணல் அள்ளுகிறார்கள் என்ற குற்றசாட்டு பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது ஆட்சியரின் கடமை.
தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் கோவில்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக ரெயில் போக்குவரத்தை நீட்டிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலசங்கம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்ப்ட்டு வந்த தூத்துக்குடியில் இருந்து சென்னை பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ், இரவு நேர கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்போது இயக்கப்படாமல் இருக்கிறது,
தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இணைப்பு ரெயில் தூத்துக்குடி பயணிகளுக்கு வசதியாக இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆகவே முக்கிய கோரிக்கைகளை ரெயில்பயணிகள் வைத்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடி-கோவை இரவு நேர ரெயில் இயக்க வேண்டும். திருநெல்வேலி -பாலக்காடு ரெயில், தாம்பரம் -சார்மினார் விரைவு ரெயில், , மதுரை லோக்மான்ய திலக் ரெயில்களை தூத்துக்குடி வரை டி வரை நீட்டிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.அதை ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்,
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
இந்துக்கள் பற்றி ஆ.ராசா பேசியது ஏற்புடையது அல்ல என்பதில் மாற்று கருத்து கிடையாது. மின் கட்டண உயர்வு என்பது கொரோனா காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைவிட மின் கட்டண உயர்வு அதிர்ச்சி அதிகம்.
தமிழகத்தில் தி.மு.க. வாக்குறுதிகள் மூலம் வென்ற அரசு. ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அரசாக இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றும் அரசுதான் நடக்கிறது,.
5 மாதத்துக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தினார்கள். பிறகு மின்சார கட்டண உயர்வு, பொருளாதார ரீதியாக கொரோனா காலமான 2 வருடத்துக்கு பிறகு பொருளாதார நிலைமையில் படிப்படியாக உயர்ந்து வரும் போது குறிவைத்து மக்களை தாக்குவது போல் இந்த சுமையை மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் அரசு கொண்டு வந்து இருக்கிறது.
பொதுவாக தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது பாராளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவை தரும். எங்களை போன்ற எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.
ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை கட்சிக்கு பயன் அளிக்குமே தவிர நாட்டுக்கு எந்த பயனும் அளிக்காது. தனியார் பஸ்கள் லாபத்தை பார்க்கவேண்டுமே தவிர அதிலாபத்தை பார்க்ககூடாது. மக்கள் வாங்கும் போனஸ் தொகையை ரெயிலுக்கும் பஸ்சுக்கும் கொடுத்துவிட்டால் மற்ற செலவுக்கு என்ன செய்வார்கள்.
தமிழகம் இன்றைக்கு போதை பொருள் விற்பனையில் தலைநிமிர்ந்த மாநிலமாக இருக்கிறது என்பது வேதனையான வெட்கப்படவேண்டிய ஒன்று. பள்ளி, கல்லூரிகள் முன்பு போதை பொருள் நடமாட்டம் இருக்கிறது, இதனால் மாணவர்கள் தள்ளாடுகிறார்கள். எனவே காவல்துறையினர் கைகளை அரசு கட்டிப்போடவேண்டாம்.
போதைபொருள் நடமாட்டம் என்பது அரசின் இயலாமையை காட்டுகிறது. போதைபொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டியது அரசின் கடமை. மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும். ஆன்லைன் ரம்மியால் யாருக்கு லாபம், இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கும் போது சந்தேகப்படும் அளவுக்கு தான் இருக்கிறது.
மேற்கண்டவாறு ஜி.கே.வாசன் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கதிர்வேல், விஜயசீலன், சுத்த்தமல்லி முருகேசன், மாரித்துரை, கோவில்பட்டி நகர தலைவர் ராஜகோபால், நகர் செயலாளர்கள் மூர்த்தி, செண்பகராஜ், துணை தலைவர் ராஜமாணிக்கம், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கமணி உள்பட பலர் உடன் இருந்தனர்.
