தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விளாத்திகுளம் தாலுகா மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் எந்திரங்கள் மூலம் ஏராளமான டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பவர்களை தடுத்து நிறுத்தவும், மணல் குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கினர். இதுகுறித்து விளாத்திகுளம் தாசில்தார் மற்றும் அதிகாரிகளை நேரில் அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதி அளித்தார்.
