3 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொது மக்களிடமிருந்து 366 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறையில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலை ஆய்வாளராகப் பணிபுரிந்த போது மரணம் அடைந்த த.அர்ச்சுனன் என்பவரது மனைவி வெ.மணித்தாய் என்பவருக்கு கருணை அடிப்படையில் மாவட்ட வருவாய் அலகு இரவுக் காவலர் பணிக்கான ஆணை, பேரூரணி கிராமத்தில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.4.50 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.76 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த விளாத்திகுளம் தொகுதியை சேர்ந்த 20 பணியாளர்கள் மற்றும் திருச்செந்தூர் தொகுதியை சேர்ந்த 6 பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரவி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
