திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

திருநெல்வேலி – பாலக்காடு இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று காலை 4.50 மணிக்கு திருநெல்வேலி வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் சுமார் 5.15 மணி அளவில் பராமரிப்பு பணிக்காக ‘பிட்லைனுக்கு’ புறப்பட்டது.
இதற்காக தச்சநல்லூர் வரை சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் மட்டும் கழற்றப்பட்டு, ரெயிலின் பின்புறம் பொருத்தப்பட்டது. அதன்பின்னர் பிட்லைனை நோக்கி ரெயில் சென்றது. அதிகாலை 5.30 மணி அளவில் பிட்லைனில் நுழைந்த பாலக்காடு ரேயிலின் கடைசி பெட்டி மட்டும் திடீரென்று தடம் புரண்டது.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார், அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பிட்லைனில் பாலருவி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் ஏற்கனவே அங்கு இருந்த காலை 6.35 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் பாசஞ்சர் ரெயிலும், 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயிலும் வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
