கோவில்பட்டியில் ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை

கோவில்பட்டி லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு நேற்று நள்ளிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்ற போது பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த 3 கைக்கடிகாரங்கள் திருட்டு போனது தெரியவந்தது.
2 வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி குங்கும சிமிழ் மற்றும் சில வெள்ளி பொருள்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து வாழை மரத்திற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததால் அவைகள் தப்பின.
இதேபோன்று மற்றொரு வீட்டிலும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் அங்கு என்ன திருட்டு போய் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் வந்த பிறகு தான் விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இனாம் மணியாச்சி மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் வசிக்கும் விஜயக்குமார் (46). இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு திரும்பி இருக்கிறார். இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.54ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
