அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் தி.மு.க.வுடன் தொடர்பில் இல்லை; டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

அ.தி.மு.க. தலைமைக்கழகதத்துக்கு பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.யை சந்தித்து கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ஒருங்கிணைப்பாளர் பதவியை மீண்டும் கொண்டுவர ஓ.பி.எஸ். முயற்சி மேற்கொள்கிறாரா?
பதில்:- உயர்நீதிமன்றத்தில இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி பார்த்தால் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. எனவே அப்படி முயற்சி செய்தால் அவர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாக அர்த்தமாகும்.
கேள்வி:- முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்திருப்பது குறித்து?
பதில்:- விஷேசங்களுக்கு வெத்தலப்பாக்கு கொடுத்து அழைப்பது வழக்கம். ஆனால் அவர்கள் இவருக்கு சாக்லெட் கொடுத்து அழைத்திருக்கிறார்கள். மேலும் நண்பர் வைத்தியலிங்கத்திற்கு அ.தி.மு.க.வில் எந்த வேலையும் இல்லை. அதனால் அ.ம.மு.க.விற்கு அவரை அழைத்திருக்கலாம்.
கேள்வி:- ஓ.பி.எஸ். சார்பில் மேல் முறையீடு செய்திருக்கிறார்களே?
பதில்:- உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது.
கேள்வி:- ஓ.பி.எஸ். தான் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ந்து அறிக்கை கொடுத்துக்கொண்டிருக்கிறாரே?
‘
பதில்:- இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அதேபோல் தேர்தலில் வாக்களிக்க வந்த பொதுமக்கள் மீதும், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்திய ஒரு ஆளுங்கட்சி ரவுடியை பிடித்துகொடுத்த என் மீது அன்று இரவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களையெல்லாம் சூறையாடிய ஓ.பி.எஸ். மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது சம்மந்தமாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்றபிறகுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னால் lஎந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் யாரெல்லாம் தலைமைக் கழகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள் என்பது கண்கூடாக சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கிறது. இவற்றையெல்லாம் பென்டிரைவில் பதிவு செய்து கொடுத்துவிட்டோம். ஆனால் இன்னும் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டனின் கேள்வியாக இருக்கிறது. ஓ.பி.எஸ்.க்கு மட்டும் தி.மு.க. வெண்தாமரை வீசுகிறதா? அவருடைய இத்தகைய செயல்களை ஆளுங்கட்சி ஊக்கப்படுத்துவதாகத்தானே இருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?
கேள்வி:- ஓ.பி.எஸ். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி லெட்டர் பேடு மூலம் அறிக்கை விடுகிறாரே?
பதில்:- பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.யை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து இப்படி செய்வது சட்டவிரோதமான செயலாகும். நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
கேள்வி:- அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே?
பதில்:- அ.தி.மு.க.வைச் சேர்ந்த எவரும் தி.மு.க.வுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை. இதனை ஆணித்தரமாக சொல்கிறேன். அண்ணன் எடப்பாடியார் தி.மு.க.வைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் எங்களுடன் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். உடனே ஆர்.எஸ்.பாரதி, எங்களுடன் 50 பேர் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார். இந்த பேச்சையெல்லாம் நீங்கள் யோசித்து பாருங்க. அவர் ஆர்.எஸ்.பாரதி இல்லை. ரீல் சுற்றும் பாரதி. ஸ்டாலின் வேண்டுமானால் எதையாவது சொல்லாம். ஆனால் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவரும் வேறு எந்த மாற்றுக் கட்சிக்கும் போக மாட்டார்கள். தி.மு.க.வின் பி டீமாக ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் இருக்கிறார்கள். இது உள்ளங்கை நெல்லிக்கனியாக நன்றாகவே தெரிகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
