காதலி சவால்: மணமேடையில் மணமகனிடம் இருந்து தாலியை பறித்து திருமணத்தை நிறுத்திய வாலிபர்

சென்னை சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் ஒரு நகை கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்தார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.
காதலிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடைபெறுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார், தனது காதலியிடம், “என்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா?” என தட்டிக்கேட்டார்.
அதற்கு அந்த பெண்,”நான் எனது பெற்றோர் பார்த்துள்ள மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன். உன்னால் முடிந்தால் எங்கள் திருமணத்தை தடுத்துப்பார்” என்று சவால் விட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண்ணுக்கு, அவரது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு இவர்களின் திருமண வரவேற்பு நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 6.30 மணியளவில் இவர்களின் திருமணம் சடங்குகள் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் மணமேடையில் வந்து அமர்ந்தனர். இருவீட்டார் முன்னிலையில் மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், சினிமா பட பாணியில் மணமகன் கையில் இருந்த தாலியை தட்டிப்பறித்து, தனது காதலியின் கழுத்தில் கட்ட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமக்கள் வீட்டார், சதீஷ்குமாரை மடக்கிப்பிடித்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட விடாமல் தடுத்தனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்து அவரிடம் இருந்த தாலியை பறித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரை ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இந்த வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், மணமகன், மணமகள் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் அழைத்து விசாரித்தனர்.
இதையடுத்து போலீசார் இரு விட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணமகன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். திருமண ஏற்பாடுக்கு தாங்கள் செய்த செலவுக்கான பணத்தை மணமகள் வீட்டாரிடம் இருந்து வாங்கி தரும்படி கூறினார். அதற்கு மணப்பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். அந்த பெண்ணை காதலனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். ஆனால் மணப்பெண், சதீஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மறுத்துவிட்டார்.
